ஊரடங்கு காரணமாக வருவாய் குறைந்ததால், 1400 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இருப்பதாக வாடகை கார் சேவை வழங்கி வரும் ஓலா நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பவிஷ் அகர்வால், ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் அளித்துள்ளார். அதில், கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், கடந்த 2 மாதங்களாக நிறுவனத்தின் வருவாய் 95 சதவீதம் குறைந்து விட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவி வருவதால் இந்தப் பிரச்சனையின் தாக்கம் நீண்ட காலம் இருக்கும் என்று அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார். பணி நீக்கப்படும் ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 3 மாத அடிப்படை ஊதியம் வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டுள்ள ஊழியர்கள் புதிய வேலை கிடைக்கும் வரை அல்லது நடப்பு ஆண்டு இறுதி வரை மருத்துவம், ஆயுள், விபத்து காப்பீடுகளை பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது