நியாய விலைகடைகளில் ஆகஸ்ட் 5ம் தேதி முதல் இலவச பொருள்களுடன் சேர்த்து, இலவச முகக்கவசமும் அளிக்கப்படுமென உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
கோடம்பாக்கம் பகுதியில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் உள்ளிட்ட நோய்த் தடுப்பு பொருட்களை அமைச்சர் வழங்கினார்.
பின்னர் கொரோனா விழிப்புணர்வு நாடகத்தை பார்வையிட்டதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சரின் தீவிர நடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்திருப்பதாகவும், 73 புள்ளி 13 சதவீதம் பேர் குணமடைந்துள்ளதாகவும் கூறினார்.
தமிழகத்தில் குடும்ப அட்டைகளில் 6 கோடியே 74 லட்சத்து 15 ஆயிரத்து 899 பெயர்கள் உள்ளன. அதில் ஒவ்வொருவருக்கும் 2 இலவச முகக்கவசங்கள் வழங்குவதாக முடிவு செய்யபட்டு 13 கோடியே 48 லட்சத்து 31ஆயிரத்து 798 முகக்கவசங்கள் வழங்கப்பட உள்ளன. மறு முறை பயன்படுத்தும் முகக் கவசமாக இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.
ரேஷன் கடைகளில் அளிக்கப்படும் இலவச பொருட்களுக்கான டோக்கன் ஆகஸ்ட் 1,3,4ம் தேதிகளில் வீடு வீடாக விநியோகிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.