பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அயோத்தி ராமர் கோவிலுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டியுள்ளார்.
அயோத்தியில் ஸ்ரீராமர் பிறந்ததாக நம்பப்படும் ராமஜென்மபூமியில் ராமர் கோயில் கட்டுமான பணிக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. இதையொட்டி டெல்லியிலிருந்து சிறப்பு விமானத்தில் உத்தர பிரதேச தலைநகர் லக்னோவுக்கு பிரதமர் மோடி இன்று காலை வந்தார். பின்னர் அங்கிருந்து அயோத்திக்கு ஹெலிகாப்டரில் பிரதமர் மோடி சென்றார். அங்கு ஹெலிகாப்டரில் வந்திறங்கிய அவரை உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நேரில் வரவேற்றார்.
அயோத்தியில் ராமஜென்மபூமிக்கு செல்லும் முன்பு அனுமன் கோயிலுக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துடன் சென்று பிரதமர் மோடி தீப ஆராதனை காட்டி வழிபாடு நடத்தினார். அங்கு பிரதமர் மோடிக்கு தலைப்பாகை, வெள்ளி கிரிடமும், ராமரின் பெயர் பொறித்த சால்வை (stole) ஆகியன நினைவுபரிசாக அளிக்கப்பட்டன.
அனுமன் கோயிலை சுற்றி வழிபாடு நடத்திவிட்டு, அங்கிருந்து காரில் புறப்பட்டு ராமஜென்மபூமிக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு முதலில் அவர் குழந்தை ராமரின் சிலை தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ள குழந்தை ராமர் கோயிலில் சாஸ்டாங்கமாக தரையில் விழுந்தும், பிறகு தீப ஆராதனை காட்டியும் வழிபாடு நடத்தினார். பின்னர் இந்து மதத்தில் புனிதமானதாக கருதப்படும் பாரிஜாத செடியை பிரதமர் மோடி நட்டு வைத்தார்.
இதையடுத்து அயோத்தி ராமர் கோயில் கட்டுமான பணி பூமி பூஜை சடங்குகளில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதில் வேத பண்டிதர்கள் மந்திரங்கள் முழங்க செய்த பூஜைகளிலும் அவர் பங்கேடுத்தார். 40 கிலோ வெள்ளி செங்கல்லை எடுத்து வைத்து அடிக்கல் நாட்டி கட்டுமான பணியை பிரதமர் தொடங்கி வைத்தார்.
பூமி பூஜை நிகழ்ச்சியில் பிரதமர், உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில் அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டது.