இந்தியாவில், கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதை கட்டுப்படுத்தத்தான் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தேசிய அளவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்லும் மக்கள், கட்டாயம் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்நிலையில், குஜராத் மாநிலம் பரோடாவில், பாதுகாப்புப் பணியில் ஈட்டுப்பட்டிருந்த மூன்று இந்திய ராணுவ வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அவர்கள் மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர். இந்த மூன்று பேருடன் நெருங்கிய தொடர்பிலிருந்த சக வீரர்கள் உட்பட, 28 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது .
இவர்களுக்கு கொரோனா எப்படிப் பரவியிருக்கும் என்பது தொடர்பாக நடந்த ட்ராக் ஹிஸ்டரியில், மூவரும் ஒரே நாளில் ஒரு ஏடிஎம்மை உபயோகித்திருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர், அந்த ஏடிஎம் சீல் செய்யப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது. அந்த ஏடிஎம்மை பயன்படுத்திய பொதுமக்களும் தாங்களாக முன்வந்து அரசுக்குத் தகவல் தெரிவித்து, தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு பரோடா நகர அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.