சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் 23 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வடசென்னை மற்றும் சென்னையின் புறநகர் பகுதிகளில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் ராயபுரத்தில் உள்ள காப்பகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டிருந்தனர். அங்கு 55 சிறுவர்கள் தங்கி இருந்த நிலையில் அதில் 23 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட வளாகத்தை தூய்மை செய்யும் பணியில் சென்னை மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுக்க சிறப்பு ஒருங்கிணைப்பாளரை தமிழக அரசு நியமித்துள்ளது.அதன்படி, நில நிர்வாக ஆணையராக பணியாற்றி வரும் மூத்த ஐஏஎஸ் அதிகாரி பங்கஜ் குமார் பன்சால் சென்னை மாநகராட்சிக்கு சிறப்பு ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை தடுக்க ஐந்து அமைச்சர்கள் கொண்ட குழு ஏற்கனவே அமைக்கப்பட்ட நிலையில், தற்போது மூத்த ஐஏஎஸ் அதிகாரியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது