சென்னையின் புகழ்பெற்ற திரையரங்குகளில் ஒன்றான ஏ.வி.எம். ராஜேஸ்வரி திரையரங்கம் நிரந்தரமாக மூடப்பட உள்ளது .
1970-களில் ஏவிஎம் ஸ்டுடியோஸ் நிறுவனத்துக்கு சொந்தமாக கட்டப்பட்ட திரையரங்கம் தான் ஏ.வி.எம். ராஜேஸ்வரி திரையரங்கம். ஏ.வி.எம் ஸ்டூடியோவின் அருகிலேயே வடபழனி சாலையில் இந்தத் திரையரங்கம் அமைந்துள்ளது.
இன்றளவும், நியாயமான விலையில் சினிமா டிக்கெட்டுகளை வழங்கி வரும் திரையரங்குகளில் ஒன்று இது. கால மாற்றத்துக்கு ஏற்றபடி உட்கட்டமைப்பில் மாற்றங்கள் கொண்டு வந்தபோதும் அதைக் காரணம் காட்டி டிக்கெட் விலையை உயர்த்தியதில்லை. இன்றுவரை , அரசு நிர்ணயித்த தொகையையே டிக்கெட் கட்டணமாக வசூலித்து வருகிறது.
சென்னை நடுத்தரக் குடும்பங்களின் திரையரங்கத் தேர்வில் முதன்மையானதாக இருந்து வந்த ஏ.வி.எம். ராஜேஸ்வரி திரையரங்கம் மூடப்படப் போகும் செய்தியால் சென்னைவாசிகள் பலர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அதோடு தங்களின் திரையரங்க நினைவுகளை டிவிட்டரிலும் , பேஸ்புக்கிலும் தொடர்ந்து பதிவு செய்தவண்ணம் உள்ளனர்.