தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்தி பரிசோதனை செய்யவேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிரா, தெலுங்கானா, தமிழகம், ராஜஸ்தான், அரியானா, குஜராத், ஜம்மு காஷ்மீர், கர்நாடகம், உத்தரகாண்ட், மத்திய பிரதேசம் ஆகிய 10 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. இதையடுத்து கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்கள், மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் ஆகியோருடன் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் பிரீத்தி சுதன் காணொலிக் காட்சி மூலம் ஆய்வு நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்தவேண்டியதின் முக்கியத்துவம், உடனடியாக பரிசோதனைகள் நடத்த வேண்டியதின் அவசியம் குறித்து விவாதிக்கப்பட்டது.
கொரோனாவால் ஏற்படும் இறப்பு விகிதத்தைக் குறைக்க, வயதானவர்கள், நீண்டகாலம் நோய்வாய்ப்பட்டவர்கள் போன்ற பிரிவினருக்கு முன்னுரிமை அளிப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டோரின் தொடர்புகளைக் கண்டறிவதும் கொரோனா பலியை தடுக்க உதவும் என்று கூட்டத்தில் எடுத்துக் கூறப்பட்டது. இந்த விளக்கங்களை அடுத்து, சுகாதார உள் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் மேலாண்மை அமைப்பை ஏற்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியது.
அதனுடன்,பொதுமக்களுக்கு வழக்கமாக கிடைக்க வேண்டிய மற்றும் அத்தியாவசிய சுகாதார சேவைகளை வழங்கவும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும் கொரோனா நோயாளிகளை சரியான நேரத்தில் கண்டறிவதற்கு, வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், கணக்கெடுப்பு குழுக்களை இதற்காக மேம்படுத்த வேண்டும் என்றும் கூட்டத்தில் மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
மருத்துவமனைகளில் நோயாளிகளைத் திறம்பட சோதனை செய்யவேண்டும் என்றும், சோதனை முடிவுகளை சோதனைக் கூடங்கள் உரிய நேரத்தில் வழங்குவதை உறுதி செய்யவேண்டும் என்றும் கூட்டத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டது.