கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக, இந்த ஆண்டுக்கான(2020) அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் அமர்நாத் குகைக்கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள்.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை வரும் ஜூன் மாதம் 23-ம் தேதி தொடங்க இருந்த நிலையில், இந்த ஆண்டுக்கான(2020) அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் நிலவி வரும் கொரோனா தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, இந்த ஆண்டுக்கான(2020) அமர்நாத் யாத்திரையை ஏற்பாடு செய்வது விவேகமானதல்ல என்று இன்று நடைபெற்ற வாரிய கூட்டத்தில் ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது.
மேலும் அமர்நாத் யாத்திரை செல்லும் இடத்திலிருந்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் 77 சிவப்பு மண்டலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுநோயால், மருத்துவ வசதி, முகாம் நிறுவுதல், நிவாரண பொருள்கள் வழங்குவது போன்றவை சாத்தியமில்லை. மேலும் மத்திய அரசு மே 3ம் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கை பிறப்பித்துள்ளது. இது மேலும் நீட்டிக்கப்படுவது குறித்து கணிப்பது சிரமமான காரியம். யாத்திரீகர்களின் பாதுகாப்பு எங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அந்த வாரிய கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.