அரசு பலமுறை எச்சரிக்கை விடுத்தும் கோயம்பேடு காய்கறி சந்தை வியாபாரிகள் நஷ்டம் ஏற்படும் என்ற அச்சத்தால் இடமாற்றத்தை ஏற்கவில்லை. இதுவே கொரோனா தொற்று பரவ காரணமாக அமைந்துவிட்டது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்துள்ளார்.
மாநிலத்தின் மற்ற பகுதிகளில் காய்கறி சந்தையை வேறு இடங்களுக்கு அரசு மாற்றிவிட்ட நிலையில் கோயம்பேடு காய்கறி சந்தையில் சமூக விலகல் கடைபிடிக்கப்படாத நிலையில், முறையே 29.03.2020 மற்றும் 06.04.20 ஆகிய தினங்களில் துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வம் அவர்கள் நேரடியாக கோயம்பேடு சந்தை வியாபாரிகள் சங்கத்தினரிடம் மக்கள் அதிகம் கூடுகிறார்கள். எனவே வேறு இடத்திற்கு மாற்றிவிடலாம் என்று வலியுறுத்தினார். ஆனால் கோயம்பேடு வியாபாரிகள் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு விடும் என்று கூறி அதற்கு சம்மதிக்கவில்லை.
அடுத்து ஏப்ரல் 11ம் தேதி மீண்டும் அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் அப்போதும் கோயம்பேடு காய்கறி சந்தை வியாபரிகள் வேறு இடத்திற்கு இடம் மாறினால் தங்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்று அச்சம் தெரிவித்து இடம் மாற மறுத்துவிட்டனர்.
தொற்று ஏற்பட்ட உடன் இறுதியாக அரசு இனியும் கோயம்பேடு சந்தையில் காய்கறி சந்தையில் வியாபாரம் செய்ய அனுமதிக்க முடியாது. மாற்று இடமான திருமழிசைக்கு செல்லுங்கள் என்று அறிவுறுத்தினோம், அதை அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.
அதன்பின்னர் திருமழிசை சந்தை 10.5.2020 முதல் செயல்படுகிறது. ஆனால் கோயம்பேடு சந்தை விஷயத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொய்யான செய்திகளை ஊடகங்களில் பரப்புகிறார்கள். அரசு உரிய நடவடிக்கை எடுத்தது. பல முறை சொல்லியும் வியாபாரிகள் நஷ்டம் ஏற்படும் என்ற அச்சத்தால் செல்லாததே தொற்று பரவ காரணம்.
மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பதால் சென்னையில் கொரோனா தொற்று அதிகமாக இருக்கிறது.ஒரிரு நாளில் கோயம்பேடு உடன் தொடர்புடைய நோய் தொற்றுடன் உள்ள அனைவரும் கண்டுபிடிக்கப்படுவார்கள். அவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்படும். மக்களுக்கு என்னென்ன வழிகளில் நன்மை செய்ய முடியுமோ அத்தனை வழகளிலும் அரசு செய்தது. மக்களுக்கு எந்தெந்த வகையில் உதவ முடியுமோ அதையும் அரசு செய்தது. மக்களுக்கு சொல்வது எல்லாம் என்று தான்.
இந்தியாவிலேயே மருத்துவ சிகிச்சை அளிப்பதில் தமிழகம் முதன்மையாக விளங்குகிறது. மருத்துவமனைகளில் இருந்து படிப்படியாக பலர் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர். அரசு சொல்லும் விழிப்புணர்வு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். வெளியில் சென்றால் சமூக இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பினால் சோப்பு போட்டு கையை கழுவுங்கள் .இதை கடைபிடித்தாலோ நோய் பரவுவதை தடுக்கலாம்.
வெளிமாநிலத்தில் உள்ள தமிழர்களை மீட்பதற்கு படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.