கொரோனா தடுப்பு மருந்தான கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை இரண்டு மடங்காக உயர்த்தியுள்ளது சீரம் மருந்து தயாரிப்பு நிறுவனம்.
மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு என தனித்தனியாக விலையை நிர்ணயித்தும், அமெரிக்கா, ரஷ்யா, சீனாவில் விற்பனையாகும் கொரோனா தடுப்பூசியின் விலைகளை ஒப்பிட்டும் இந்த புதிய விலைப்பட்டியலை சீரம் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, தற்போது விற்கப்படும் கொரோனா மருந்தான கோவிஷீல்டு தடுப்பூசி விலை இருமடங்கு அதிகரித்துள்ளது.
ஏற்கனவே ஒரு டோஸ் கோவிஷீல்டு ரூ.250க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இனி, தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு டோஸ் கோவிஷீல்டு ரூ.600க்கும், மாநில அரசுகளுக்கு ரூ.400 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது தனியார் மருத்துவமனைகளில் கோவிஷீல்டு தடுப்பூசி ரூ.250-க்கும், அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும் போடப்படுகிறது.
சீரம் நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி ஒரு டோஸ் ரூ.1500க்கும், ரஷ்யாவில் ரூ.750-க்கும், சீனாவில் ரூ.750க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அந்த வகையில் உலகளவில் மிகக் குறைந்த விலையில் இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.