இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் தனது யூ டியூப் வலைத்தளத்தில் டிஆர்எஸ் வித் அஷ்வின் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார் . அதில் முன்னாள் வீரர்கள் பலரும் கலந்து கொண்டு அவர்களுடைய சுவராசியமான அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியாவின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளரும் , முன்னாள் இந்திய அணியின் கேப்டனுமான அனில் கும்ளே டிஆர்எஸ் வித் அஷ்வின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் அதில் அவர் பேசியதாவது
பாகிஸ்தானுக்கு எதிராக 1999-ம் ஆண்டு டெல்லியில் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட் வீழ்த்தியது வாழ்வில் முக்கியமான நிகழ்வு என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அனில் கும்ளே கூறுகையில் நான் பாகிஸ்தானுக்கு எதிராக 1999-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற போட்டியில் முதல் ஆறு விக்கெட்டுக்களையும் வீழ்த்திய பின்னர் தேனீர் இடைவேளை வந்தது.
தேனீர் இடைவேளைக்குப்பிறகு மீண்டும் களம் இறங்கியபோது கொஞ்சம் சோர்வாக இருந்தேன். ஏனென்றால், உணவு இடைவேளையில் இருந்து தேனீர் இடைவேளை வரை தொடர்ச்சியாக பந்து வீசினேன்.
தேனீர் இடைவேளைக்குப்பிறகு, முன்னதாக பந்து வீசியதுடன் சிறப்பாக பந்து வீச முடிவும் என்று எண்ணினேன். ஆனால் 10 விக்கெட் வீழ்த்துவேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை.
8-வது மற்றும் 9-வது விக்கெட்டை வீழ்த்தியபின் என்னுடைய ஓவர் முடிவடைந்தது. ஓவர் முடிந்து தேர்டு மேன் நிலையில் பீல்டிங் செய்ய சென்றபோது, ரசிகர்கள் கவலைப்படாதீர்கள் நீங்கள் நிச்சயமாக பத்து விக்கெட் வீழ்த்துவீர்கள் என்று கத்தி கொண்டே இருந்தனர்.
அப்போது ஸ்ரீநாத் ஒருபக்கம் பந்து வீசி கொண்டிருந்தார். நான் ஸ்ரீநாத்திடம் 10 விக்கெட் வீழ்த்துவது குறித்து ஏதும் கூறவில்லை. ஆனால் நான் 10 விக்கெட் வீழ்த்த அணியில் அனைவரும் முயற்சி மேற்கொண்டனர்.
ஒருவர் தொடர்ச்சியாக வைடாக பந்து வீசுவது எளிதான காரியம் இல்லை. அந்த போட்டியில் அப்போது ரமேஷ் ஒரு கேட்சை மிஸ் செய்தார் ஆனால் அதை வேண்டுமென்றே கேட்ச் மிஸ் செய்தார் என்று நினைக்க வேண்டாம். பந்து அவரை விட்டு விலகிச் சென்று விட்டது, இல்லையென்றால் அவர் பிடித்திருப்பார்.
என்னுடைய அடுத்த ஓவரை வாசிம் அக்ரம் எதிர்கொண்டார். அவர் தாக்குப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார். இதனால் அக்ரம் மிட்-ஆஃப், மிட்-ஆன் திசையில் பந்தை அடித்துவிட்டு ஒரு ரன் அடிக்க விட வேண்டும் என்று முடிவு செய்தேன். ஆனால் இரண்டு பந்துகள் வீசிய பின்னர், அவர் ஒரு ரன்னை அடிக்க விரும்பவில்லை என்பதை உணர்ந்து கொண்டேன்.
அதனால் பீல்டர்களை அருகில் கொண்டு வந்து பந்து வீசினேன். ஸ்ரீநாத் மேலும் ஒரு ஓவரை அப்படி வீசுவார் என்று என்னால் நினைக்க முடியவில்லை. வாசிம் அக்ரம் பந்து டர்ன் ஆகும் என்று நினைத்தார். ஆனால் பந்து டர்ன் ஆகவில்லை. பந்து எட்ஜ் ஆகியது. லட்சுமண் சிறப்பாக கேட்ச் பிடித்தார். ஆகவே, என்னுடைய சாதனை ஒரு அணியின் ஒட்டுமொத்த முயற்சி. எனக்கு 10 விக்கெட் வீழ்த்தும் அதிர்ஷ்டம் இருந்தது என அனில் கும்ளே கூறினார் . மேலும் அந்த நிகழ்ச்சியில் இந்திய அணிக்கு கேப்டன் ஆன தருணம் , கர்நாடக கிரிக்கெட் சங்க பணிகள் , சென்னையில் சுனாமி வந்த போது ஏற்பட்ட அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இங்கிலாந்தை சேர்ந்த ஜிம் லேகருக்கு அடுத்தப்படியாக ஒரே இன்னிங்சில் 10 விக்கெட் வீழ்த்திய ஒரே பந்து வீச்சாளர் அனில் கும்ளேதான் என்பது குறிப்பிடத்தக்கது.