இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் இன்ஸ்டாகிராமில் ஸ்போர்ட்ஸ் தாக்கில் உரையாடினார். அப்போது அவர் பேசுகையில்,
“டிஆர்ஆஸ் (நடுவர் முடிவை மறுஆய்வுக்குட்படுத்தும் முறை) தொழில்நுட்பம் இருந்திருந்தால், கும்ப்ளே 900 விக்கெட்டுகளையும், ஹர்பஜன் சிங் 700 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருப்பார்கள். அவர்கள் எல்பிடபிள்யு முடிவுகளை தவறவிட்டிருக்கிறார்கள். ஹர்பஜன் சிங் கேப்டவுனில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர்கள் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் விளையாடியிருந்தால், எதிரணியால் 100 ரன்களைக்கூட எடுத்திருக்க முடியாது.” என்றார்.
இதைத் தொடர்ந்து கும்ப்ளேவின் தலைமைப் பண்பு குறித்து பேசிய கம்பீர் 2008-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை நினைவுகூர்ந்தார். இதுதொடர்பாக அவர் பேசுகையில்,
சேவாக்கும், நானும் இரவு நேர உணவருந்திக் கொண்டிருந்தோம். அப்போது கும்ப்ளே எங்களிடம் வந்து, இந்தத் தொடரில் என்ன நிகழ்ந்தாலும் நீங்கள் இருவர்தான் தொடர் முழுவதும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கப் போகிறீர்கள் என்றார். மேலும், 8 இன்னிங்ஸிலும் (4 ஆட்டங்கள் டெஸ்ட் தொடர்) டக் அவுட் (ரன் ஏதும் எடுக்காமல்) ஆனால்கூட பரவாயில்லை என்றும் தெரிவித்தார். என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் இதுபோன்ற வார்த்தைகளை யாரிடமிருந்தும் நான் கேட்டதில்லை. அவர் கூறிய வார்த்தைகள் இன்னும் எனது மனதில் உள்ளது” என்றார்.
Picture Courtesy: Sports Picz