பயனாளர்களின் தகவல்கள் அவர்களுக்கே தெரியாமல் இந்தியாவிற்கு வெளியே பகிரப்படுவதாக கிடைத்த தொடர் புகார்களை அடுத்து டிக்டாக், ஹலோ ஆப், யூசி ப்ரோசர் உள்ளிட்ட 59 சீன செயலிகளை தடை செய்ததாக மத்திய அரசு அறிவித்தது.
அதனையடுத்து, சீனப் பொருள்களைப் புறக்கணிக்க வேண்டும் என்ற கோஷம் நாடு முழுவதும் எழுந்தது. இந்தப் பின்னணியில் தடைசெய்யப்பட்ட சீன ஆப்களான டிக்டாக்குக்கு மாற்றாக சிங்காரி ஆப்பும், ஹலோ ஆப்புக்கு மாற்றாக ஷேர்சேட் ஆப்பும் இந்திய பயனாளர்களைக் கவர்ந்துவருகிறது.
இந்த இரண்டு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆப்களாகும். அதேபோல, மற்ற ஆப்புகளுக்கு மாற்றாகவும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆப்களுக்கு வரவேற்புகள் கிடைத்துவருகின்றன. இந்தநிலையில், இந்தியாவில் ஆப்கள் தயாரிப்பதை ஊக்கும் விதமாக பிரதமர் மோடி புதிய திட்டத்தை தொடங்கியுள்ளார்.
இதுதொடர்பாக அவருடைய ட்விட்டர் பதிவில், ‘இந்தியாவில் உலகத் தரம் வாய்ந்த ஆப்களை உருவாக்கவேண்டும் என்று தொடக்கநிலை நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு மிகப்பெரிய ஆர்வம் இருந்துவருகிறது. அவர்களுடைய சிந்தனைகள் மற்றும் தயாரிப்புகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் ஆத்மனிர்பார் பாரத் ஆப் உருவாக்கப் போட்டியை மத்திய தகவல்தொழில்நுட்பத்துறை தொடங்கிவைக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.