சிவ சுப்பிரமணிய கோமதி சங்கர முருகதாஸ் தீர்த்தபதி மகாராஜா.. நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுக்கா சிங்கம்பட்டி ஜமீனின் முடி சூடிய மன்னர் இவர்.
இந்தியாவில் முடிசூடிய கடைசி மன்னர் இவர். 1931ல் பிறந்த முருகதாஸ் தீர்த்தபதி மஹாராஜா, தனது 3 வயதில் தன் தந்தை இறந்துபோகவே, சிங்கம்பட்டி ஜமீனுக்கு மன்னராக முடிசூடிக்கொண்டார். இந்த சிங்கம்பட்டி ஜமீனுக்கு 1000 ஆண்டுகளுக்கு மேலாக வரலாறு இருக்கிறது. தற்போது இருந்த முருகதாஸ் தீர்த்தபதி மகாராஜா 33வது மன்னராவார்.
நாயக்கர் ஆட்சிகாலத்தில் பாளையமாக மாறிய சிங்கம்பட்டி சமஸ்சாதனம் 76 பாளைங்களில் 24 பாளைங்களை உள்ளடக்கிய பகுதியாக இருந்தது. பிறகு பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் ஜமீனாக மாறியது.
1952 ஜமீன் ஒழிப்புச்சட்டம் வரவே சிங்கம்பட்டி ஜமீனும் அதிகாரம் இழந்தது. அதன்பின் முறையாக முடிசூடிய கடைசி மன்னர் இவர் மட்டுமே.
சிங்கம்பட்டி ஜமீனுக்கு மேற்குதொடர்ச்சி மலையில் 8400 ஏக்கர் நிலமும், சிங்கம்பட்டி ஜமீனில் 7000 ஏக்கர் நிலமும் கட்டுபாட்டில் இருந்திருக்கிறது. 1952 க்கு பிறகு அனைத்தும் அரசாங்கம் எடுத்துகொண்டது.
தனது 89 வயதில் சிவசுப்பிரமணிய கோமதிசங்கர முருகதாஸ் தீர்த்தபதி கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமானார். சுதந்திர இந்தியாவில் வாழ்ந்த முடிசூடிய கடைசி மன்னர் ஒருவரும் இயற்கை எய்தினார்.
Credits: Mohan Kumar G