இருசக்கர வாகனங்கள் தயாரிக்கும்போதே வேகக்கட்டுப்பாட்டுக் கருவிகளைப் பொருத்துமாறு நிறுவனங்களுக்கு அறிவுறுத்த மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எக்ஸ்பிரஸ் சாலைகளில் மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லலாம் என்று மத்திய அரசு 2018ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர்.
2009 மற்றும் 2019ஆம் ஆண்டுகளின் புள்ளி விவரங்களை ஒப்பிடும்போது, இருசக்கர வாகனங்களைப் பொறுத்தவரை விபத்துகளில் சிக்கி மரணம் அடைவோரின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதைக் குறிப்பிட்டு நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
2020ஆம் ஆண்டு மத்திய சாலை போக்குவரத்துக் கழக அறிக்கையின்படி, ஒரு மணி நேரத்திற்கு 6 இருசக்கர வாகன ஓட்டிகள் பலியாவதாகத் தெரிவித்திருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதனால் இருசக்கர வாகனங்கள் உற்பத்தி செய்யும்போதே வேகக்கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தியிருக்க வேண்டுமென உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.