‘End of an era’ என்று ஆங்கிலத்தில் கூறுவர். பேராசிரியரின் இழப்பு திமுக கட்சிக்கு அப்படியே. கட்சி தொடங்கிய நாள் முதல் அருகில் இருந்து அதன் வளர்ச்சியை கண்டவர் இவர்.
‘அப்பாவிடம் இருந்து கூட பாராட்டுக்கள் பெறலாம் ஆனால் பேராசிரியரிடம் இருந்து பெறுவது மிக கடினம்’, என்று ஸ்டாலின் எப்பொழுதும் கூறுவார்.
இவரது பாராட்டு கிடைப்பதற்க்கே கட்சியில் அனைவரும் கடினமாய் உழைப்பார்களாம்!
அத்தனை முக்கியத்துவம் இவருக்கு. காரணம், மறந்த தலைவர் கருணாநிதி இவரை கண்ட விதம். இவர்களுக்கிடையே இருந்த அந்த நட்பு.
திருவாரூரில் பிறந்து வளர்ந்து, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற இவர், தன் இயற்பெயர் ‘ராமையா’ என்பதை தனித்தமிழில் பெயர் சூட்ட விரும்பி ’அன்பழகன்’ என்று பின்னர் மாற்றிக் கொண்டார்.
சிறு வயதிலிருந்தே பெரியார் ஈ.வெ.ரா மீதும், அவரது கருத்துகள் மீதும் ஆர்வம் கொண்டிருந்தார். அந்த காலத்திலையே மேடை பேச்சுகளில் அனல் பறக்கச் செய்வாராம்.
திருவாரூரில் ஒருமுறை இளைஞர்கள் மாநாடு நடைபெற்றது. அதற்கு தலைமை ஏற்றிருந்த அறிஞர் அண்ணா, பல்கலைக்கழக மாணவரான ராமையாவை பேச வைத்தார்.
அங்கு, அண்ணாவை காண வேண்டும் என்று ஆவலாக நின்றுக்கொண்டிருந்த கருணாநிதி, இவரது பேச்சினை கேட்டு, அவரது ஊரில் நடக்கும் ஒரு கூட்டத்தில் பேச அழைத்துச்சென்றார். அங்கு தொடங்கியது இவர்களின் நட்பு. சுமார் 75 ஆண்டுகள் தாண்டி இலக்கணமாய் திகழ்ந்தது.
“எனக்கு அக்காள் உண்டு.. ஆனால் அண்ணன் இல்லை… பேராசிரியர்தான் என் அண்ணன்”, என்றார் கருணாநிதி.
“முதலில் நான் மனிதன், 2-வது நான் அன்பழகன், 3-வது நான் சுயமரியாதைக்காரன், 4-வது அண்ணாவின் தம்பி, 5-வது கலைஞரின் தோழன்”, என்றே தன்னை அறிமுகம் படுத்திக்கொள்வாராம் அன்பழகன். கலைஞரின் கூடவே இருந்து பல வெற்றி மற்றும் தோல்விகளை சந்தித்து இருக்கிறார்.
இவர்களுக்குள் சண்டை வந்தது இல்லை என்றாலும் கருத்து வேறுபாடுகள் பல முறை இருந்துள்ளது. ஆனால் நட்பினை முன் படுத்தி அதனைத் தாண்டி வந்துள்ளார்கள்.
ஒரு முறை திமுக-அதிமுக இணைப்பு பற்றி பேச்சு வந்த பொழுது, இவர்களின் முடிவில் கோபம் கொண்ட அன்பழகன், ‘கருணாநிதி வேண்டுமானால் அதிமுகவிற்கு போகட்டும் அவர் ஒன்றும் திமுகவின் சொத்து இல்லையே,’ என்றார். அதிர்ந்துபோன கருணாநிதி உடனே அந்த பேச்சினை நிறுத்திவிட்டார்.
பல முறை இதே போன்று தன் கருத்துக்களை முகத்தின் முன் கூறியுள்ளார். கலைஞருக்கு பிடித்த குணங்களில் இதுவும் ஒன்று.
அதே போன்று இவருக்கு கிடைக்க வேண்டிய மரியாதைகள் என்றும் இவருக்கு குறையாமல் கிடைக்கும் படி செய்தார் கருணாநிதி.
வயதான பிறகு, இவர்கள் சந்திக்கும் பொழுது, கண்கள் நலம் விசாரிப்பதே அதிகம். இவ்வளவு ஆண்டுகள் பழகியதால் என்னவோ இவர்களின் மௌனங்கள் அன்பினை வெளிப்படுத்தியது.
இவர்கள் பேசிய மொழி இவர்களுக்கு மட்டுமே புரிந்தது. கருணாநிதி நடக்க முடியாமல் போன பொழுது, தன் பிறந்தநாள் அன்று தானே வீட்டிற்கு வந்து வாழ்த்துகள் வாங்கிச்சென்றார் அன்பழகன்.
எப்பொழுதும் கருணாநிதி சென்று பார்த்துவிடுவார் ஆனால் அவருக்கு அன்று முடியவில்லை. அன்பழகனை கண்டவுடன் கருணாநிதியின் கண்கள் மலர்ந்தது. மௌனங்கள் நிரம்பிய அந்த அறையில், கருணாநிதி, அன்பழகனின் கைப்பிடித்து, முத்தம் கொடுத்தார். அதன் அர்த்தம் அன்பழகனுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று.
ஆங்கிலத்தில் ‘Kissing a goodbye’ என்று கூறுவார்களே அதன் வெளிப்பாடாய் கூட இருக்கலாம். ஏன் என்றால் அதன் பிறகு இவர்கள் சந்திக்கவே இல்லை.
கருணாநிதி இருந்த பொழுது நடந்ததை நம்ப முடியாமல், ஸ்டாலின் கூட்டிவர, அதிர்ந்து பொய் நின்றார் அன்பழகன்.
மீண்டும் மௌனம் மொழியானது. மெதுவாக காலில் மாலையினை வைத்தபிறகு, ஏதோ மனதில் கூறிக்கொண்டது போல் இருந்தது.
போய் வா என்று கூறி இருப்பாரோ?
இல்லை, கோபமாய், தன்னை விட்டுச்சென்றத்துக்கு சண்டை போட்டு இருப்பாரோ? இவர்களின் முதல் சண்டை…
நண்பரை பிரிந்து இருந்தது போதும் நானும் செல்கிறேன் என்று சென்றுவிட்டார். வந்துவிட்டேன் நானும் என்று…
திமுக இந்த இழப்பினை ஈடு செய்ய கண்டிப்பாக முடியாது. இருந்தும், தன் நண்பருடன் சேர்ந்து இருவரும் மேலிருந்து கட்சியை பார்த்துக்கொள்வர் என்ற நம்பிக்கையுடன்…!