துல்கர் சல்மான், ரிது வர்மா, ரக்சன், நிரஞ்சனி அகத்தியன், கௌதம் வாசுதேவ் மேனன், அனிஷ் குருவில்லா நடிப்பில் ,கே.எம். பாஸ்கரனின் ஒளிப்பதிவில் ,
ஹர்ஷவர்தன், ரமேஷ்வர் இசையில்
தேசிங் பெரியசாமியின் இயக்கத்தில் வந்துள்ள படம்
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ….!
இந்த தலைப்பைப் பார்த்தவுடன் ஒரு வழக்கமான காதல் கதை என்றுதான் இயல்பாக தோன்றும் ஆனால் படம் இப்படித்தான் போகும் என்று நாம் நினைத்தால் அதற்கு அப்படியே நேர் எதிராக நடைபெறுவதுதான் படத்தின் மிகப் பெரிய வெற்றி …!
ஆன்லைன் வர்த்தகத்தில் எப்படிப்பட்ட முறைகேடுகள் எல்லாம் நடக்க வாய்ப்பு உள்ளது என்பதைப் பார்க்கும் போது நமக்கு அதிர்ச்சிதான் வருகிறது…!
ஓ காதல் கண்மணி படத்திற்குப் பிறகு துல்கர் சல்மானுக்கு நல்ல ஒரு பிரேக் தந்துள்ள படம் . ஆப் டெவலப்பர், ஹைடெக் திருடன் கதாபாத்திரத்தில் அப்படியே பொருத்தமாக நடிக்கிறார். அந்த இயல்பான நடிப்பும் , அவரின் தமிழ் உச்சரிப்பும் நன்றாக உள்ளது . தமிழ் சினிமா இன்னும் அதிகமாக துல்கர் பண்ணலாம் அவருக்கென்று ஒரு இளம் ரசிகைகள் கூட்டம் இருப்பதை திரையரங்குகளில் காண முடிந்தது ..!
படத்தின் இரண்டாவது கதாநாயகன் என ரக்ஷனைச் சொல்லலாம். படம் முழுவதும் அவர் அடிக்கும் டைமிங் ஜோக்குகளில் சில நன்றாகவே வொர்க் அவுட் ஆகியுள்ளது . இன்னும் கொஞ்சம் தன்னை வளர்த்துக் கொண்டால் தமிழ் சினிமாவில் பல ஹீரோக்களுக்கு நண்பராக வரும் வாய்ப்பு உள்ளது ..!
ரித்து வர்மா, தெலுங்கு படமான பெல்லிசுப்லுவில் இருந்தே நான் ரசிக்கும் நடிகை .ஆரம்பத்தில் இருந்து ஐயோ பாவம் என்று நாம் சொல்லும் அளவிற்கு நடித்திருக்கிறார். இவருக்குப் பின்னால் அப்படி ஒரு கதை இருக்கிறது என்பதைத் தெரிய வரும் போது நமக்கும் பேரதிர்ச்சி. அப்படி ஒரு டிவிஸ்ட்டை இவர் கதாபாத்திரத்தில் இயக்குனர் வைத்திருப்பார் என்பதை துளி கூட யூகிக்க முடியாது. இந்தப் படத்தில் கிடைக்கும் வரவேற்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வர்லாம்…!
இரண்டாவது கதாநாயகியாக நிரஞ்சனி அகத்தியன், நம் பக்கத்து வீட்டுப் பெண் போன்ற தோற்றம். கொஞ்சம் முறைப்பாக இருந்தாலும் ரசிக்க வைக்கிறார், புல்லட் எல்லாம் ஓட்டி அசத்துகிறார்…!
டிசிபி ஆக கவுதம் மேனன் , இவருக்குள் இப்படி ஒரு நடிப்பா என ஆச்சரியப்பட வைக்கிறார். இந்த படத்தை பார்த்து பல இயக்குனர்கள் கௌதம் வீட்டு கதவினை தட்டுவார்கள் அந்த அளவிற்கு நல்ல ஒரு தேர்ந்த நடிப்பினை தந்து அசத்தியுள்ளார். கிளைமேக்ஸில் தியேட்டரே கௌதமிற்கு விழுந்து விழுந்து சிரிக்கிறது…!
ஒரு இயல்பான கதைக்கு கே.எம். பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்த விதம் படத்திற்குக் கூடுதல் பலம் …!
பாடல்கள் சில நன்றாக இருந்தாலும் அவை இல்லாமல் இருந்திருந்தால் படம் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும்…!
படத்தின் ஆங்காங்கே சில லாஜிக் மீறல்கள் இருக்கின்றன, திருடா திருடா படத்தை போல் உள்ளது என இருந்தாலும் ,இதையெல்லாம் மீறி நம்மை உட்கார வைக்க படத்தில் பல சிறப்பம்சங்கள் உள்ளன . மெல்லிய காதல் , இரட்டை அர்த்தமற்ற காமெடி , கலர்புல் ஒளிப்பதிவு என மேகிங்கில் மேஜிக் செய்துள்ளனர் …!
படம் பல இடையூறுகளை கடந்து இரண்டு வருட தாமத இடைவெளியில் வந்தாலும் அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படி உள்ளது ..!
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – இந்த தலைப்பை தேர்வு செய்த இயக்குனருக்கு ஒரு ஸ்பெஷல் பூச்செண்டு …!