இந்தியா முழுக்க கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்றில் இருந்து மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய லாக் டவுனில் பச்சை, ஆரஞ்ச் மண்டலங்களில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. சிவப்பு மண்டலத்தில் கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாடு முழுக்க பச்சை, ஆரஞ்ச் மண்டலங்களில் மதுவிற்பனை கடைகள், பான் மசாலா கடைகள் இயங்க அனுமதி அளித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது
கர்நாடகாவில் இன்று மதுக்கடைகள் திறக்கப்பட உள்ளது . மாநிலம் முழுக்க சிவப்பு, பச்சை, ஆரஞ்ச் என்று மண்டல வேறுபாடு எதுவும் இன்றி மொத்தமாக மதுக்கடைகள் திறக்கப்பட உள்ளது. இதனால் அங்கு குடிமகன்கள் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
பெங்களூரில் மொத்தம் 24 வார்டு கட்டுப்பாட்டு பகுதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு இருக்கும் 26 இடங்களில்தான் கொரோனா தீவிரமாக பரவி உள்ளது. அதேபோல் வேறு சில மாவட்டங்களிலும் கர்நாடகாவில் இப்படி சில கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளது. இந்த கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர பெங்களூர் முழுக்க மற்ற இடங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை மது விற்பனை செய்யப்படும். இதனால் காலையிலே அங்கு மது வாங்க மக்கள் பலர் வரிசையாக லைனில் நிற்கிறார்கள். ஒரு மாதத்திற்கு பின் இவர்கள் மது வாங்க வரிசையில் இருக்கிறார்கள். தனி மனித இடைவெளிவிட்டு இவர்கள் லைனில் நிற்கிறார்கள்.
கர்நாடகாவில் மது கடைகளில் அமர்ந்து குடிக்கும் பார்களுக்கு அனுமதி கிடையாது. மதுவை வாங்கிவிட்டு வீடுகளுக்கு சென்று மது குடிக்கலாம். அதேபோல் கடைகளில் மதுவை வாங்கும் போது ஆறு அடி இடைவெளியை மக்கள் பின்பற்ற வேண்டும். பொது இடங்களில் இருந்து மது அருந்த கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மதுகடைகளில் 5 பேருக்கு மேல் கூடக்கூடாது என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
Image Courtesy : Anand VR