கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தனிமனித இடைவெளியை உறுதிசெய்ய கேரளாவின் கிராமப் பஞ்சாயத்து ஒன்று நூதன உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
உலகளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ள போதும் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது.
சீனாவின் ஊஹானில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் தற்போது 180 நாடுகளுக்கு மேல் தடம்படித்துள்ளது. சீனாவில் இந்த வைரஸ் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் மற்ற நாடுகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இதன் தாக்கம் அதிகளவில் உள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்வர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்தை கடந்துள்ளது. கேரளாவில் கொரோனா வைரஸால் 458 பேர் பாதிக்கப்பட்டும் 4 பேர் உயிரிழந்தும் உள்ளனர். கேரளாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு எடுத்துள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை நல்ல பலனை அளித்துள்ளது.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த சமூக இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க ஆலப்புழாவில் நூதன உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த தண்ணீர்முக்கோம் பகுதியில் யார் எங்கு சென்றாலும் குடைபிடிப்பது கட்டாயம் என கிராமப் பஞ்சாயத்து அறிவித்துள்ளது.
இதற்காக மலிவு விலையில் அங்குள்ள அனைத்து குடும்பத்தினருக்கும் குடை விற்பனைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடைபிடித்து செல்வதன் மூலம் ஒருவர் மற்றவரை தொடுவது தவிர்க்கப்படும் என்றும், ஒருவருக்கும் மற்றவருக்கும் இடையே குறைந்தபட்சம் ஒருமீட்டர் இடைவெளி பேணப்படும் என்றும் அம்மாநில நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் தெரிவித்துள்ளார்.