நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்ட அறிவிப்புகள்:
மலிவு விலை வீடுகளை வாங்குபவர்களுக்கான வட்டி மானியம் ஒராண்டுக்கு தொடரும். கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்த திட்டம் மேலும் ஒராண்டு மார்ச் 21 வரை நீட்டிக்கப்படுகிறது.
வீட்டுவசதி துறையை மேம்படுத்த 70 ஆயிரம் கோடிக்கு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. மலிவு விலை வீட்டுக்கு வட்டி மானியம் அளிப்பதால் 2.5 லட்சம் குடும்பத்தினர் பயனடைவாவர்கள். இதனால், இரும்பு, சிமென்ட், போக்குவரத்து துறை தேவை அதிகரித்து வேலைவாய்ப்பு பெருகும்.
பயிர்கடன் வழங்கும் ஊரக கூட்டுறவு வங்கிகளுக்கு கடன் வழங்க நபார்டு வங்கி மூலம் 30 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கப்படும்.
மீனவர்கள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்களுக்கும் கிசான் கிரெடிட் கார்டு திட்டம் விரிவுபடுத்தப்படும். இந்த திட்டத்தில் ரூ.2 லட்சம் கோடி கடன் வழங்கப்படும். கிசான் கடன் அட்டை மூலம்2.5 கோடி விவசாயிகள் பயனடைவார்கள்.
பயிர்கடன் வழங்கும் ஊரக வங்கிகளுக்கு நபார்டு மூலம் ரூ.30 ஆயிரம் கோடி அவசர கால நிதி அளிக்கப்படும்.
வனம் மற்றும் வனம்சார்ந்த பகுதிகளில் வேலைவாயப்பை உருவாக்க ரூ. 6 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும். இதன் மூலம் ஆதிவாசி பழங்குடியின மக்கள் வேலைவாய்ப்பு பெற்று, அவர்களின் பொருளாதாரம் பலம்பெரும்.
நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே ஊதியம் திட்டம் அமல்படுத்தப்படும்.
அனைத்து தொழில் நிறுவனங்கள், வேலைகளில் பெண்கள் ஈடுபட அனுமதி அளிக்கப்படுகிறது. உரிய பாதுகாப்பு வசதிகளுடன் பெண்களை இரவுப் பணியில் அனுமதிக்கலாம்.
வெளிமாநில தொழிலாளர்களுக்கு நகரங்களில் உள்ள பயன்படாத அரசு கட்டடங்கள், அரசு – தனியார் பங்களிப்புடன் மலிவு வாடகை குடியிருப்பு ஏற்படுத்தி தரப்படும்.
வெளிமாநில தொழிலாளர்கள் நாட்டில் உள்ள எந்த ரேசன் கடையிலும் பொருட்களை வாங்க அனுமதி.
குறைந்த வாடகையில் வீடுகள் கட்டி வழங்கும் நிறுவனங்கள், அமைப்புகளுக்கு மத்திய அரசு சார்பில் மானியம் வழங்கப்படும்.
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் உரிய நேரத்தில் ஊதியத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.