கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே ஓடும் பேருந்தில் பயணித்த தம்பதியருக்கு கொரோனா பாசிடிவ் என்று செல்போன் அழைப்பு வந்ததால், பேருந்து நடுவழியில் நிறுத்தப்பட்டது. அச்சத்தில் பயணிகள் இறங்கி ஓடிய நிலையில் அந்த பேருந்தை கிருமி நாசினியால் குளிப்பாட்டிய சம்பவம் பணிமணை வாயிலில் அரங்கேறியது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இருந்து வடலூர் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்தை ஓட்டுநர் சக்திவேல் ஓட்டிச் செல்ல, நடத்துனர் சிவகுமார் பயணிகளிடம் பயணச்சீட்டு கொடுத்துக் கொண்டிருந்தார்
பேருந்து காடாம்புலியூர் வந்த போது, நெய்வேலிக்கு செல்வதற்காக ஒரு தம்பதியர் பேருந்தில் ஏறி பயணித்தனர். பேருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் தம்பதியருக்கு சுகாதார துறையினரிடம் இருந்து செல்போன் அழைப்பு வந்தது.
எங்கே இருக்கிறீர்கள் ? என்ற கேள்விக்கு அந்த தம்பதி தாங்கள் பேருந்தில் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்று கூறியதும் போனை பேருந்து நடத்துனரிடம் கொடுக்குமாறு கூறியதால், அந்த தம்பதியர் தங்கள் செல்போனை நடத்துனரிடம் கொடுத்து பேச கூறியுள்ளனர்.
போனை வாங்கி காதில் வைத்த பேருந்து நடத்துனரிடம், அந்த தம்பதியருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது பாசிட்டிவ் என்று உறுதியாகியுள்ளது, எனவே அவர்களை அப்படியே இறக்கி விட்டு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
பாசிடிவ் தம்பதியரை சாலையில் இறக்கி விட்டு செல்லுங்கள்,ஆம்புலன்ஸ் வந்து ஏற்றிச்சென்று விடும் என்று சுகாதாரத்துறையினர் கூறியதால் பேருந்து நடுவழியில் நிறுத்தப்பட்டது.
இதனை தெரிவித்து தம்பதியரை பேருந்து நடத்துனர் இறக்கி விட்ட அடுத்த நொடி, பேருந்தில் இருந்த சக பயணிகள் விட்டால் போதும் என்று மற்றொரு வாசல் வழியாக இறங்கி ஓட்டமெடுத்ததாக கூறப்படுகிறது.
கொரோனா தம்பதியரிடம் போனை வாங்கி பேசிய பேருந்து நடத்துனர், தனக்கும் தொற்று வந்திருக்குமோ ? என்று பேயரைந்தாற் போல நிற்க, ஓட்டுனர் சக்திவேல் சம்பவம் குறித்து வடலூர் பணிமனைக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து அங்குள்ளவர்கள் உச்சபட்ச உஷார் நிலைக்கு சென்றனர். உடனடியாக பேருந்து பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
வடலூரில் உள்ள பணிமனை வாசலில் நிறுத்தப்பட்ட பேருந்தை கிருமி நாசினியால் குளிப்பாட்டினர். அந்த தம்பதியர் அமர்ந்திருந்த இருக்கை, பயணிகள் இருக்கை என பேருந்து முழுவதும் கிருமி நாசினியால் நன்றாக கழுவப்பட்ட பின்னர் பணிமனைக்குள் அனுமதிக்கப்பட்டது.
கொரோனா பரிசோதனை செய்து கொண்டவர்கள் முடிவு வரும் வரையாவது தங்களை தனிமைப்படுத்திக் கொள்வது அவசியம். அரசு பலமுறை எடுத்துச்சொல்லியும் இப்படி பொறுப்பில்லாமல் பேருந்து பயணம் மேற்கொண்டால், கொரோனா நோய் தொற்று ஒருவரிடம் இருந்து பலருக்கும் பரவும் அபாயம் உள்ளது என்று எச்சரிக்கும் சுகாதாரத்துறையினர், அந்த பேருந்தில் பயணித்தவர்களை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தியுள்ளனர்.
பொதுமக்கள் சமூகப்பொறுப்பை உணர்ந்து முன் எச்சரிக்கையுடன் சமூக இடைவெளியை கடை பிடிக்க வேண்டும். வெளிநாடு மற்றும் வெளியூர்களில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்கள் குறைந்த படசம் 14 நாட்கள் வீட்டிலேயே இருந்து தங்களை தனிமை படுத்திக் கொள்வது சமூகத்தில் நோய் பரவலை தடுக்கும்.