கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி மகன் திருமணம், ஊரடங்கு விதிகளை மீறியும், சமூக இடைவெளியையும் பின்பற்றாமல் நடந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் இந்தியாவை நாளுக்கு நாள் அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் பரவலின் வேகம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்படதாதால், சமூக இடைவெளியை பின்பற்றுவதன் மூலமே அந்நோய் பரவலை கட்டுப்படுத்த முடியும்.
எனவே, அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் வரும் பொது மக்கள் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். ஊரடங்கு சமயத்தில் திருமணங்கள், இறுதிச் சடங்குகள் போன்றவற்றை 20 பேர்களுக்கு மேல் கூடாமல் நடத்த வேண்டும் உள்துறை அமைச்சகம் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
இந்த நிலையில், கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகன் திருமணத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு, சமூக இடைவெளியை துளியும் பின்பற்றாமல் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தேவகவுடாவின் பேரனும், முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகனுமான நிகில் குமாரசாமி, முன்னாள் அமைச்சர் ஒருவரின் பேத்தியான ரேவதியை இன்று திருமணம் செய்தார். இந்த திருமணத்தில் அனைத்து சடங்குகளும் பின்பற்றப்பட்டன. நூற்றுக்கணக்கானோர் திருமண நிகழ்வில் கலந்து கொண்டனர். விழாவில் பங்கேற்ற யாரும் முகக்கவசங்களும் அணியவில்லை.
இது குறித்து பேசிய கர்நாடக துணை முதல்வர் அஸ்வத் நாரயண் “குமாரசாமி வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படும் என அறிவித்திருந்தார். அவர் நீண்ட காலமாக பொது வாழ்வில் உள்ளார். முதல்வராகவும் இருந்துள்ளார். அவர் வழிகாட்டுதல்களை பின்பற்றாதது தெரிந்தால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். முன்னதாக திருமண நிகழ்ச்சியை பெங்களூருவில் நடத்த குமாரசாமி திட்டமிட்டிருந்தனர். பெங்களூரு சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டதால், குமாரசாமி தனது சொந்த தொகுதியான ராமநகராவில் உள்ள பண்ணை வீட்டிற்கு திருமணத்தை மாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.