அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக இன்று நடைபெறும் பூமிபூஜையில் பிரதமர் மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டுகிறார். இதையொட்டி, பிரமாண்ட ஏற்பாடுகளுடன் அயோத்தி நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. ராமர் கோயில் கட்டுவதற்காக ஏற்கனவே தயாரிக்கப்பட்ட கோயில் மாதிரி வரைபடத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு, புதிய வரைபட மாதிரிகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்நிலையில், இன்று நடைபெறும் அடிக்கல் நாட்டு விழாவிற்காக, சுமார் 2 ஆயிரம் ஆலயங்களின் புனித மண் மற்றும் 100 நதிகளின் புனித நீர் அனுப்பிவைக்கப்பட்டு உள்ளது
கடந்த 2 நாட்களாக அயோத்தி கோவில் பூமிபூஜைக்கான யாகங்கள் மற்றும் பல்வேறு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவையொட்டி, அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. நகர் முழுவதும் அலங்கரிக்கப்பட்டு, ராமாயணத்தில் இடம்பெற்ற உருவங்கள் வரையப்பட்டுள்ளன.
அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று சிறப்பு விமானம் மூலம் அயோத்தி வருகிறார். முதலில் அனுமன் காட்டி (Ghati) கோயிலுக்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கு வழிபாடு செய்த பின்னர் ராம ஜென்மபூமிக்கு செல்கிறார். கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக பிரதமர் மோடியின் அருகில் வருவதற்கு குருக்கள் உள்ளிட்டோருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனை தொடர்ந்து பிரதமர் மோடி 40 கிலோ வெள்ளி செங்கல்லை நிறுவி, கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
விழாவில் கலந்து கொள்வதற்கு சாமியார்கள் 135 பேர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உட்பட 175 நபர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விழா மேடையில் பிரதமர் மோடி, மாநில ஆளுநர் ஆனந்திபென் படேல், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மகந்த் நிருத்திய கோபால்தாஸ் ஆகியோர் மட்டுமே இருப்பார்கள்.
பூமி பூஜை பிற்பகல் 12.30 மணிக்கு தொடங்கும். 12.40 மணிக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியதும், 2 மணி வரை பூஜை நடைபெறும். பிற்பகல் 2.30 மணிக்கு பிரதமர் மோடி டெல்லி புறப்படுகிறார்.
பிரதமர் வருகையை முன்னிட்டு, அயோத்தி நகரம் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. என்எஸ்ஜி எனப்படும் தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்கள் உள்ளிட்ட 4 ஆயிரம் பேர், விழா நடைபெறும் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.