Penbugs
Editorial/ thoughts

Remembering Cho Ramaswamy

பத்திரிகையாசிரியர் ,
நாடக ஆசிரியர்,
நடிகர்,
வழக்கறிஞர் ,
அரசியல்வாதி ,

என‌ பன்முகத்தன்மை கொண்ட சோ ராமசாமியின் நினைவுதினம் இன்று …!

அவரின் வாழ்க்கையில் நடந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகள் :

1970 ஜனவரியில் துக்ளக் இன்னும் ஆரம்பிக்காதபோது சோவை விகடனில் எடுத்த பேட்டி. நன்றி, விகடன்!

பத்திரிகை ஆசிரியர் ஆகிறார் ‘சோ’!
நிருபர்: நீங்கள் பத்திரிகை ஆரம்பிக்கப் போவதாகப் பலர் சொல்கிறார்களே, உண்மையா?

சோ: யாரெல்லாம் சொன்னார்கள்?

நிருபர்: மன்னிக்கவும்! நான் உங்களைப் பேட்டி காண வந்திருக்கிறேனா அல்லது நீங்கள் என்னைப் பேட்டி காணப் போகிறீர்களா?

சோ: நான் உங்களைக் கேள்வி கேட்க ஆரம்பித்ததிலிருந்து நானும் ஒரு பத்திரிகைக்காரனாக மாறிக்கொண்டிருக்கிறேன் என்று தெரியவில்லையா?

நிருபர்: உங்களுக்கு இந்த ஆசை எப்படி வந்தது?

சோ: அது தமிழ்நாட்டின் தலை விதி!

நிருபர்: உங்கள் பத்திரிகையின் ஆசிரியர் யார்?

சோ: ஒரு சகலகலா வல்லவர்!

நிருபர்: யார் அது?

சோ: நான்தான்.

நிருபர்: பத்திரிகை ஆரம்பிக்கும் நோக்கம், லட்சியம் என்ன?

சோ: மக்களுக்கு நல்வழி காட்டி ஒரு புதிய பாரதத்தை உண்டாக்க வேண்டும்; நாட்டின் ஒருமைப்பாட்டிற்காக எல்லா மக்களும் தோள் கொடுத்துச் செயலாற்றவேண்டும்; ஒவ்வொரு தமிழனும் தன் கடமையை உணர்ந்து தன்னைப் பெற்ற தாய்க்கும், தான் பிறந்த மண்ணிற்கும் பெருமை தேடித் தர வேண்டும்; இலக்கியம், பண்பாடு, இந்தியக் கலாசாரம் இவை ஓங்கி வளரவேண்டும். இந்த லட்சியங்களுக்காகத்தான் நான் பத்திரிகை ஆரம்பிக்கப் போகிறேன் என்று நீங்கள் எதிர்பார்த்தால், அது என் தவறல்ல! பத்திரிகை ஆரம்பிக்க வேண்டும் என்று தோன்றியது; ஆரம்பிக்கப் போகிறேன். அவ்வளவுதான்!

நிருபர்: உங்கள் பத்திரிகை எப்போது வெளிவரும்?

சோ: பொங்கல் ரிலீஸ்!

நிருபர்: முதல் இதழில் உங்கள் பத்திரிகையில் என்னென்ன வரும் என்று சற்று விளக்கமாகக் கூற முடியுமா?

சோ: ஏன்? துக்ளக்கை யாரும் வாங்கக் கூடாது, உங்கள் ஆனந்த விகடனையே படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று பார்க்கிறீர்களா?

நிருபர்: சரி! உங்கள் பத்திரிகையின் அமைப்பைப் பற்றி ஏதாவது கூற முடியுமா?

சோ: எவற்றையெல்லாம் பார்த்து எனக்குச் சிரிப்பு வருகிறதோ அவற்றையெல்லம் பார்த்து மக்களையும் சிரிக்க வைக்க முயலப் போகிறேன். I am going to look around me and also make my readers look around themselves…!

எமர்ஜென்சியின்போது அனைத்து பத்திரிகைகளும் தனது பதிப்பினை நிறுத்தி வைத்தன ஆனால் துக்ளக் மட்டும் கீழ்கண்ட வாசகத்தோடு இதழை வெளியிட்டது

“Since there is no useful news to publish, people can use the magazine for writing paal kanakku, veetu kanakku”

துக்ளக் கேள்வி-பதில் பகுதியில் சோ அவர்களின் சுவாரசியமான பதில்:

கேள்வி: அரசியல் தலைவர்கள் வரும்போது வெள்ளையாக ஒரு கிருமி நாசினி பவுடரை வழி எங்கும் தூவுகிறார்கள். அவர்கள் சென்றபிறகு அப்படியே விட்டுவிடுகிறார்கள். அரசியல்வாதிகள் ஆரோக்கியம்தான் பிரதானமா? மக்கள் நோய் வந்து இறந்தால் பரவாயில்லையா?

பதில்: நீங்கள் ஏன் கோபப்படுகிறீர்கள்? கிருமிகள் மக்களைத் தாக்க வரும்போதுதான் மக்களைக் காக்க கிருமிநாசினி தேவை. மற்ற நேரங்களில் அது தேவையில்லை. அதனால்தான் அரசியல்வாதிகள் மக்களைச் சந்திக்க வரும்போது அதைத் தூவுகிறார்கள். மற்ற நேரங்களில் தூவுவதில்லை…!

கேள்வி : முகமது பின் துக்ளக் நாடகத்தின் வசனங்கள் இன்றைய சூழ்நிலையிலும் பொருந்துகிறதே அது எப்படி …?

சோ : நான் அந்த காலகட்டத்திற்கான நிகழ்வுகளை வைத்து அதை எழுதினேன் ஆனால் இன்றும் அது பொருந்துகிறது என்றால் என்றும் மாறாமல் இருக்கும் அரசியல்வாதிகளுக்கு நன்றி …!