Penbugs
Coronavirus

மலர்தூவி ரோஜாவுக்கு வரவேற்பு அளித்த மக்கள் – சர்ச்சையில் சிக்கிய வீடியோ

ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஆந்திர மாநில சட்டமன்ற உறுப்பினரான நடிகை ரோஜா, அவரது தொகுதிக்கு வரும்போது மக்கள் பூத்தூவி வரவேற்கும் வீடியோ மிகுந்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

‘செம்பருத்தி’ படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையிற்கு அறிமுகமானவர் நடிகை ரோஜா. தமிழ்நாட்டில் நடிகையாக அறியப்படும் ரோஜா, ஆந்திராவில் முழு நேர அரசியல்வாதியாக இயங்கி வருகிறார். முதலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியிலிருந்த இவர், அதன்பின் அக்கட்சியிலிருந்து விலகி ஜெகன்மோகனின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசில் இணைந்தார். தற்போது ஆந்திராவில் உள்ள நகரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்து வருகிறார். மேலும் ஜெகன்மோகன் கட்சியின் மகளிர் அணித்தலைவியாகவும் உள்ளார்.

இந்நிலையில் ரோஜா குறித்த ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் மிகுந்த விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. ஆந்திரா மாநிலம், நகரி தொகுதியில் உள்ள ஒரு வீதியில் குடிநீர் திட்டத்தைத் தொடங்கி வைப்பதற்காக அவர் வருகை தந்தார். அப்போது அந்த ஊர் மக்கள் ஒன்றாகத் தெருவின் இரு பக்கமும் வரிசையாக நின்று அவரை மலர்த்தூவி வரவேற்கின்றனர். அந்தக் காட்சி சினிமாவில் உள்ளதைப் போல எடுக்கப்பட்டுள்ளது. வீடியோவில் முகக்கவசம் அணிந்து கொண்டு உள்ள ரோஜா, மக்கள் மலர்த்தூவி வரவேற்பதை மிகவும் உற்சாகமாக ஏற்றுக் கொண்டு நடந்து வருகிறார்.

அதன் பிறகு அங்குள்ள ஒரு ஆழ்துளைக் கிணற்றுக்குப் பூஜைப் போட்டு வணங்கிவிட்டு அந்தக் குடிநீர் குழாயை மக்களுக்கு அர்ப்பணிக்கிறார். அவர் இந்த நேரத்திலும் அச்சம் கொள்ளாமல் மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய வந்ததற்காகப் பலரும் அவரைப் பாராட்டி வருகின்றனர். ஆனால் வேறு சிலர் இப்படி சினிமா பாணியில் பூப்போட்டு அவரை வரவேற்பதை விமர்சித்து வருகின்றனர். ஆகவே அவரது வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக மாறி உள்ளது.