ஆன்மிக பூமியாக விளங்கும் திருவண்ணாமலைக்கு ஏராளமான வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம். சில வெளிநாட்டினர் மாதக்கணக்கில் இங்கேயே தங்கியும் இருப்பார்கள். அப்படித் தங்கியிருந்த சிலர், கொரோனா நோய்த் தொற்று வீரியம் அடைவதற்கு முன்பாகவே தங்களது நாடுகளுக்குச் சென்றுவிட்டனர். சிலர் திருவண்ணாமலையிலே பாதுகாப்போடு இருக்கிறனர். இந்நிலையில், கடந்த 5-ம் தேதி அன்று தீபம் ஏற்றும் மலை மீது உள்ள கற்க் குகையில், சுற்றுலாப் பயணி ஒருவர் தங்கியிருப்பதைப் பார்த்த வனத்துறை காவலர்கள், அவரை கீழே அழைத்து வந்தனர்.
அவரிடம் போலீஸ் நடத்திய விசாரணையில், அவர் பெயர் யங்யாஹூரி என்பதும், சீனா தலைநகரான பெய்ஜிங்கை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அவர், கொரோனா அச்சுறுத்தலுக்கு முன்பே இந்தியாவுக்குச் சுற்றுலா வந்து பல இடங்களை சுற்றிவிட்டு, கடைசியாகத் திருவண்ணாமலைக்கு வந்து ரமணர் ஆசிரமத்தில் தங்கியிருந்ததும், பிறகு அங்கிருந்து வெளியேறிய அவர், மார்ச் 25-ம் தேதி முதல் தீப மலை மீது சென்று அங்கேயே கடந்த 10 நாட்களாகத் தங்கியிருந்ததும் விசாரணையில் தெரிந்தது.
அவர் சீனாவைச் சேர்ந்தவர் என்பதால், அவருக்கு கொரோனா நோய்த்தொற்று இருக்கலாம் என்ற அச்சத்தில், பரிசோதனைக்காகக் கடந்த 5-ம் தேதி திருவண்ணாமலை அத்தியந்தால் மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு, அவருடைய ரத்த மாதிரியை எடுத்து சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது சீனப் பயணி யங்யாஹூரிக்கு கொரோனா தொற்று ஏதும் இல்லை என்று ரிப்போர்ட் வந்துள்ளது.
இதுகுறித்து திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி கூறுகையில், “சீனாவை சேர்ந்த அந்த பயணி ரமணர் ஆசிரமத்தில் தங்கியிருந்துள்ளார். கொரோனா தொற்று ஊரடங்கு நிலையில் அங்கிருந்து அவரை வெளியே அனுப்பியுள்ளனர். வெளியே வந்த அவர் பல ஓட்டல்களில் ரூம் கேட்டுள்ளார். யாரும் கொடுக்காத நிலையில், தனியாகச் சென்று குகையில் தங்கியிருந்துள்ளார். அவருடைய இரத்த மாதிரியை இரண்டு முறை பரிசோதனை செய்தோம். இரண்டு முறை பரிசோதனை செய்ததில், அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது. வரும் 3-ம் தேதிக்குப் பிறகு விமான போக்குவரத்து துவங்கினால், மாவட்ட நிர்வாகம் மூலம் அவருடைய சொந்த நாட்டிற்கு அனுப்பிவைக்கப்படும்” என்றார்.