கொரோனா தொற்றால் பாதித்தவர்களை கையாளும் போது, பாதிப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் டாக்டர் உள்ளிட்டவர்களின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என டில்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதித்த மாநிலங்களில், 1,707 பாதிப்புகளுடன் டில்லி 2வது இடம் பிடித்துள்ளது. 42 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில், டில்லியில் செய்தியாளர்களை சந்தித்த கெஜ்ரிவால் கூறியதாவது: ஜஹாங்கிர்புரியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 26 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது கவலை அளிக்கும் விஷயம். டில்லியில் 71 கட்டுப்பாட்டு மண்டலங்கள் உள்ளன. மக்கள் அனைவரும் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும்.
கொரோனா ஏழை, பணக்காரர், சாதி பார்த்து வராது. ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம். கொரோனா பாதிப்பு வரவிருக்கும் நாட்களில் குறைய வேண்டும் என கடவுளிடம் பிரார்த்திப்போம். மக்கள் தொடர்ந்து வெளியில் நடமாடி கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசு ஊரடங்கை பிறப்பித்ததற்கு வலுமான காரணம் உள்ளது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவமனை துப்புரவு பணியாளர்கள், ஆய்வக பணியாளர்கள், கொரோனா பாதித்து உயிரிழந்தால், அவர்களின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி வழங்கப்படும்.