சாத்தான்குளத்தில் ஊரடங்கு காலத்தில் கடை திறந்ததற்காக விசாரணைக்கு அழைத்து செல்லப்பபட்ட செல்போன் கடை உரிமையாளர் ஜெயராஜ் அவரின் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸார் தாக்கியதால் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர்களில் முதலில் தந்தை ஜெயராஜூம் மகன் பென்னிக்சும் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். தென்மாவட்டத்தில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தபட்ட காவல்துறை அதிகாரிகளின் மீது கொலை வழக்கு பதியுமாறு பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர் .சமூக வலைதளங்களால் தற்போது இந்த பிரச்சினை தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
*திமுக நிதியுதவி *
கோவில்பட்டி சிறையில் உயிரிழந்த ஜெயராஜ் – பென்னிக்ஸ் குடும்பத்திற்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்த 25 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டது.
திரு ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தந்தையையும் மகனையும் காவல்துறையினர் சரமாரியாகத் தாக்கியும், லத்தியை பின்புறம் வழியே உடலுக்குள் திணித்துக் கொடுமைப்படுத்தியும், வேட்டி – சட்டையெல்லாம் ரத்தத்தில் நனையும் வகையில் சித்திரவதை செய்தும், நெஞ்சுப்பகுதியில் உள்ள முடிகளைப் பிய்த்தெறிந்து மிருகத்தனமாகக் கொடுமைப்படுத்தப்படுத்தி உயிர் பறிக்கப்பட்டிருப்பதை பென்னிக்சின் தாயும் – சகோதரியும் கண்ணீரோடும் சொல்வதைக் கண்டு தமிழகமே பதறுவதாக மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.
மேலும் அவர்களுக்கு 25 லட்ச ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என்றும் அவர் அறிவித்திருந்தார். அதன்படி, திமுக மகளிரணி செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி, ஜெயராஜ் – பென்னிக்ஸ் குடும்பத்தாரிடம் 25 லட்ச ரூபாய்க்கான காசோலையையும், திமுக தலைவரின் கடிதத்தையும் வழங்கினார்.
*அதிமுக நிதியுதவி *
சாத்தான்குளம் சம்பவத்தில் மரணமடைந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தாருக்கு அதிமுக சார்பில், 25 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் இணைந்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், தந்தையையும் மகனையும் இழந்து வாடும் அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துள்ளதோடு, அதிமுக சார்பில் 25 லட்ச ரூபாய் குடும்பநல நிதியுதவி வழங்கப்படும் என்றும் ஓபிஎஸ்-இபிஎஸ் அறிவித்துள்ளனர்.
இதனிடையே, ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட 20 லட்சம் ரூபாய் நிவாரண தொகைக்கான காசோலையை, அமைச்சர் கடம்பூர் ராஜூ நேரில் சென்று வழங்கினார்.