நடிகர் திலகம். இது வெறும் வார்த்தை அல்ல. அது தான் ஏற்றுக்கொண்ட பாத்திரம் ஒவ்வொன்றிற்கும் தனக்கே உரிய புதிய ஸ்டைலை உருவாக்கி அளிப்பதினால் அவரின் உழைப்பிற்கு வந்த பரிசு..!
சிவாஜியின் உடல் மொழி வேறாக இருந்தபோதும் அவர் தனக்கே உரிய கற்பனையின் துணை கொண்டு நடிக்கும் கேரக்டரின் சுபாவங்களுக்கேற்ற புதிய ஸ்டைலைத் தனது உடலில் உருவாக்கிக் காட்டி ரசிகனைப் பரவசப்படுத்தி விடுவார்.
சிவாஜி கணேசன், திரையுலகுக்கு வரும் முன்னர் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனை மெச்சிய தந்தை பெரியார், அவரை ‘சிவாஜி’ கணேசன் என்று அழைத்தார். அன்றிலிருந்து அந்த பெயரே நிலைத்தது…!
நடிகர்திலகத்தின் நடிப்பை இக்கால மக்கள் மிகைப்படுத்தப்பட்ட நடிப்பாக கருதலாம் ஆனால் அவர் நடித்த காலகட்டத்தில் இருந்த பெருவாரியான மக்களின் மனநிலையை கருத்தில் கொண்டே அவரின் நடிப்பு இருந்தது , அடுத்து சிவாஜியை இயக்கிய அவரது இயக்குநர்களின் விருப்பமாக எது இருந்ததோ அதையே அவர் தந்தார்…!
இதற்கு இரு வேறு உதாரணங்கள் :
- சோ ராமசாமி எப்பொழுதும் துடுக்காக பேச கூடியவர் ஒருமுறை சிவாஜியிடம் ஏன் எல்லா படத்திலும் ஓவர் ஆக்ட் பண்றீங்க என கேட்க அதற்கு நடிகர்திலகம் கூறிய பதில் இது உனக்கு ஓவர் ஆக்டிங்கா இருக்கலாம் ஆனால் திரையில் என்னை காணும் மக்கள் அதைதான் விரும்புவார்கள் நீ திரையரங்குகளுக்கு நேரில் சென்று பார் என்று சொன்னாராம் சோவும் திரையரங்குகளில் காணும்போது சிவாஜி அழுதால் மக்களும் அழுதார்களாம்….!
- இயக்குனர் மகேந்திரன் இதே கேள்வியை சிவாஜியிடம் கேட்டதற்கு சிவாஜி கூறியது என்னிடம் வரும் இயக்குனர்களின் கையில் பென்சில் , பவுண்டைன் பேனா , சிறிய பெயிண்டிங் பிரஷ் , பெரிய பெயிண்டிங் பிரஷ் உள்ளது அதில் அவர்களுக்கு எவ்வாறு தேவையோ அவ்வாறு வரைந்து கொள்கிறார்கள் என்று கூறினாராம். தங்கபதக்கத்தில் மனைவி இறந்தபின் வரும் காட்சியில் நன்றாக அழுது வசனம் பேச வேண்டும் என்று படத்தின் இயக்குனர் காட்சி அமைத்தபோது அந்த கதையை எழுதிய மகேந்திரன் சிவாஜியிடம் சென்று இந்த காட்சியில் வசனமே இல்லாமல் நடிக்க வேண்டும் என்றும் அதற்கான காரணத்தையும் கூறிய பின் அப்படியே நடித்து கொடுத்தாராம் அதுதான் சிவாஜி..!
சிவாஜி என்றும் பல நடிகர்களோடு கூட்டு சேரந்து நடிக்க தயங்கியதே இல்லை ஏனெனில் அவருக்கு தெரியும் அவர்களை தாண்டி ஒரு காட்சியிலாவது தனது தனித்தன்னமையை வெளிப்படுத்த முடியும் என்று …!
சிவாஜிக்கு நடிப்பை தவிர வேறு எதுவும் தெரியாது முழு மூச்சாக நடிப்பினை பார்த்தார் எதையும் உள்வாங்கி கொண்டு நடிப்பது அவருக்கு கைவந்த கலை
சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில், வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம், 99வது முறையாக மேடையேற்றப்பட்டது. நாடகத்தின், ‘கிளைமாக்ஸ்’ காட்சியில், நீண்ட வசனத்தை, உணர்ச்சிப்பூர்வமாக பேசி, இறுதியில், ‘துா’ என்று துப்ப வேண்டும். அன்று, சிவாஜி, உணர்ச்சிப்பூர்வமாக பேசப் பேச, அவர் வாயிலிருந்து, ரத்தம் கொட்டியது. சிவாஜியின் உடல்நலம் கருதி, வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம், அத்துடன் நிறுத்திக் கொள்ளப்பட்டது…!
அடுத்த தலைமுறை நடிகர்களோடு நடிக்கும்போதும் தன்னுடைய அனுபவத்தையும் அந்த ஆளுமைத் தன்மையையும் இறுதிவரை விட்டுக் கொடுக்காமல் இருந்தார் .
தமிழ்நாட்டின் பெருமை குறித்துப் பேசும்போது, தவற விடக்கூடாத ஆளுமை நடிகர் திலகம் சிவாஜி கணேசன்….!
இன்று நடிகர் திலகத்தின் பிறந்தநாள்…!