பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கடந்த 5-ந் தேதி கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த 13-ந் தேதி உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டு மருத்துவ குழுவின் ஆலோசனையின்படி தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
செயற்கை சுவாசக்கருவிகள் பொருத்தப்பட்டன. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றும், மருத்துவ குழுவின் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார் என்றும் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை சீரான நிலையில் உள்ளது என்றும், அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து மருத்துவ குழு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறது என்றும் மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டது. எஸ்.பி பாலசுப்பிரமணியம் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக அவரது மகன் எஸ்.பி.பி சரண் தெரிவித்துள்ளார்.
எஸ்.பி பால சுப்பிரமணியம் விரைவில் உடல் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று திரைப்பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என பல தரப்பினரும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது டுவிட்டரில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ரஜினிகாந்த் கூறியிருப்பதாவது:-
50 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் உள்ள பல மொழிகளில் தன்னுடைய இனிமையான குரலால் பாடி கோடி கோடி மக்களை மகிழ வைத்த மதிப்பிற்குரிய எஸ்.பிபி அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அபாய கட்டத்தை தாண்டிவிட்டார் என கேள்விபட்டதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. இன்னும் தீவிர சிகிச்சையில் உள்ள எஸ்.பி.பி அவர்கள் சீக்கீரம் குணம் அடைய வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.