சினிமா உலகை பொறுத்தவரை சர்ச்சையில் சிக்கிய நடிகைகள் முகவரி இல்லாமல் காணாமல் போய் இருக்கிறார்கள் .இதற்கெல்லாம் மாறாக, சர்ச்சையில் சிக்கச்சிக்க ஒருவரின் புகழும் கூடும் என்றால் அது நயன்தாரா மட்டுமே….!
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் இவர் நாயகர்களின் ஆதிக்கம் அதிகமுள்ள தமிழ் சினிமாவில் கடந்த ஏழு ஆண்டுகள் முன்னணி நாயகியாகவும், பல நாயகர்களுக்கு இணையான வரவேற்பு , கைதட்டல்கள் , அதிகாலை காட்சி என தனக்கனெ தனி சாம்ராஜ்யத்தையே உருவாக்கி வைத்துள்ளார்.
காதல், தோல்வி , மீண்டும் காதல், மறுபடியும் தோல்வி என தொடர்ந்து உறவு சிக்கல்கள் மிகுந்த வாழ்வை வாழ்ந்தாலும் ஒவ்வொரு பிரிவு ஏற்பட்டபோதும் அதிலிருந்து அவர் மீண்டு வந்த விதமும், தன் இடத்தைப் பிடித்த விதமும் கவனிக்கப்பட வேண்டியவை மட்டும் அல்ல கற்றுக் கொள்ள வேண்டியவையும் அவை ..!
முதலில் ’ஐயா’ படத்தில் மிக இளம் பெண்ணாக அறிமுகமாகி யார்ரா இந்த பொண்ணு இவ்ளோ அழகா இருக்கு என்று வியப்பதற்குள் உடனே ’சந்திரமுகி’ படத்தில் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது தமிழ் சினிமாவையே அட சொல்ல வைத்தவர், ஆனால், வெகு விரைவிலேயே காதலால் ஏற்பட்ட கவனக்குறைவு அவரின் திரைப்பயணத்தை பாதித்தது.
மேலும் உடல் பருமன் ஆனதால் கஜினி, ஈ போன்ற படங்களில் நயன்தாராவின் தோற்றம் கிண்டல் செய்யப்பட்டது. இப்படி கிட்டத்தட்ட அவரது திரைவாழ்வு முடிந்துவிட்டது என்று எண்ணப்பட்டபோது ’பில்லா’ படத்தில் யாருமே எதிர்பாராத வண்ணம் எடையைக் குறைத்து செம ஸ்லிம்மாகவும், ஸ்டைலிஷாகவும் ரீ-எண்ட்ரி கொடுத்தார் நயன்தாரா.
தமிழ் சினிமாவில் பொதுவாக ரீ-எண்ட்ரி என்பதெல்லாம் ஹீரோக்களுக்கான விஷயமாகவே இருந்தது. அதை மாற்றி போட்டது நயன்தான் ..!
கோலமாவு கோகிலா என்ற சிறிய படம் அத்தனை வரவேற்பை பெற காரணம் முழுக்க முழுக்க நயன்தாரா மட்டுமே அதுவும் தமிழ் சினிமாவில் ஐந்து மணி காட்சி என்பது ஒரு சாதரண விசயமே இல்லை முன்னணி நாயகர்களுக்காக மட்டும் ஒதுக்கப்பட்ட நேரம் .அதனை தனக்காக ஒதுக்கி வைக்க நயன் பட்ட கஷ்டங்களும் , அதற்கான அவரின் உழைப்பும் அசாத்தியமானது …!
காதல் காட்சிகளுக்கும், பாடல்களுக்குமே கதாநாயகிகள் என்ற நிலையில் இருந்த சினிமா தற்போது வேகமாக மாறிவருகிறது என்பது உண்மை அதை முன்னெடுத்து செல்லும் ஒரு நடிகையாக இன்றும் விளங்குவது நயனின் தனிச்சிறப்பு …!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சூப்பர்ஸ்டார் நயன்தாரா….!