தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இறுதி வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் வெளியிடப்பட்டிருக்கும் இறுதி வாக்காளர் பட்டியலில் ஒட்டுமொத்தமாக 6 கோடியே 26 லட்சத்து 74 ஆயிரத்து 446 (6,26,74,446) வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இவர்களில் 3 கோடியே 8 லட்சத்து 38 ஆயிரத்து 473 ஆண் வாக்காளர்கள் உள்ளனர். பெண் வாக்காளர்கள் 3,18,28,727 பேர் இடம்பெற்றுள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் 7,246 பேர் இடம்பெற்றுள்ளனர்.
தமிழகத்திலேயே சோழிங்கநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதி அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதியாகவும், துறைமுகம் தொகுதி குறைந்தபட்ச வாக்காளர்களைக் கொண்டதாகவும் உள்ளது.
அதன்படி, 6,94,845 வாக்காளர்கள் சோழிங்கநல்லூர் தொகுதியிலும், துறைமுகத்தில் 1,76,272 வாக்காளர்களும் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட 12 லட்சத்து 98 ஆயிரம் பேர் தபால் ஓட்டு போட தகுதி பெற்றுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
சென்னையில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்ட , பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறினார். தபால் வாக்கு அளிப்பதற்காக சிறப்பு படிவம் வழங்கப்படும் என்று அவர் கூறினார்.
ஒரே நேரத்தில் இவ்வளவு அதிகமானோர், தபால் வாக்கு போட தகுதி பெற்றிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.