வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த வெளிமாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான நோயாளிகளும் அவர்களின் உறவினர்களும், ‘கொரோனா’ லாக்டௌன் காரணமாக மீண்டும் ஊர் திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. அதேபோல், கூலி வேலைக்கு வந்த வடமாநிலத் தொழிலாளர்களும் சொந்த ஊர் செல்ல விருப்பப்பட்டனர். அதையடுத்து, ஆன்லைன் மூலம் அவர்களின் விவரங்கள் பெறப்பட்டன.
அதன்படி, முதற்கட்டமாக ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 1,140 பேரை சிறப்பு ரயில் மூலம் காட்பாடியிலிருந்து அனுப்பிவைக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுகளைச் செய்தது.
அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர், கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தமாகக் கழுவவைத்து, முகக்கவசம் அணியச்செய்து, அரசுப் பேருந்துகள் மூலம் காட்பாடி ரயில் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.
ஏற்கெனவே தயாராக நிறுத்திவைக்கப்பட்டிருந்த 24 பெட்டிகளைக் கொண்ட சிறப்பு ரயிலில், தனிமனித இடைவெளி விட்டு அவர்கள் அமரவைக்கப்பட்டனர். அவர்களுக்கு கொரோனா தடுப்பு மண்டல சிறப்பு கண்காணிப்புக் குழு அலுவலர் மங்கத்ராம் சர்மா, கலெக்டர் சண்முகசுந்தரம் ஆகியோர் உணவுப் பொட்டலங்களைக் கொடுத்து வழியனுப்பிவைத்தனர்.
நள்ளிரவு 11 மணியளவில், சிறப்பு ரயில் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சிக்குப் புறப்பட்டது. கொரோனா காலகட்டத்தில், தமிழகத்திலிருந்து இயக்கப்படும் முதல் சிறப்பு ரயில் இதுதான் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல், அடுத்தடுத்த கட்டமாக மீதமுள்ள வெளிமாநிலத்தவர்களும் சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளனர். அதற்கான ஏற்பாடுகளையும் வேலூர் மாவட்ட நிர்வாகம் தீவிரமாகச் செய்துவருகிறது.