தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது.
தமிழகத்தில் நேற்று முதல் 16-ந்தேதி வரை 3 நாட்கள் தடுப்பூசி திருவிழா நடக்கிறது.
இந்த தடுப்பூசி திருவிழாவில் பொதுமக்கள் ஆர்வமாக பங்கேற்று தடுப்பூசி போட்டு வருகிறார்கள்.
தமிழகத்தில் தற்போது தினமும் 1.63 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த எண்ணிக்கையை 2 லட்சமாக உயர்த்த சுகாதாரத்துறை திட்டமிட்டு இருந்தது.
அதன்படி இன்று ஒரே நாளில் 2 இலட்சத்து 17 ஆயிரத்து 666 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை 43 இலட்சத்து 90 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரிகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், நகர்ப்புற மற்றும் கிராமப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 1900 மினி கிளினிக்குகள் மற்றும் தடுப்பூசி செலுத்த அனுமதி பெற்ற தனியார் மருத்துவமனைகள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.