ஆற்காட்டை அடுத்த மாங்காட்டை பூர்விகமாக கொண்ட தேவாவிற்கு பள்ளி பருவத்தில் இருந்தே இசையில் நாட்டம் அதுவும் மெல்லிசை மன்னரின் இசையின் மீது தீராக் காதல் அதனால் குடும்பம் சென்னைக்கு மாறிய பின், தன் பள்ளிப்படிப்பை விட்டுவிட்டு இசை பயில ஆரம்பித்தார். தான்சேன் மாஸ்டரிடம் மேற்கத்திய இசையையும் , அப்படியே கர்னாடக இசையையும் கற்று தேர்ந்தார் …!
அதன் பிறகு 200க்கும் மேற்பட்ட பக்தி ஆல்பங்களை வெளியிட்டார் தேவா. 200வது ஆல்ப வெளியீட்டில் அவர் யாரை குருவாக நினைத்து கொண்டு இருந்தாரோ அவர் தலைமைதாங்கியதோடு மட்டுமில்லாமல் தேனிசைத் தென்றல் என்ற பட்டத்தையும் தந்தார். ஆம்… திரை இசைக்கு வருவதற்கு முன்னரே அவருக்கான பட்டம் முடிவு செய்யப்பட்டது …!
‘மெல்லிசை மன்னர்’ பட்டம் கொடுத்ததை விட பெரிய அதிர்ச்சி தேவாவிற்கு மேடையில் எம்எஸ்வியே இவருக்கு யார்னா படம் வாய்ப்பு தாருங்கள் என கேட்டதுதான் என தேவா நெகிழ்ச்சியுடன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார் …!
தேவா அறிமுகமான படம் இன்றுவரை வெளிவராத படம் அவர் வரிசையாக பதினாங்கு படங்களில் பணியாற்ற வாய்ப்பு வந்தாலும் ஒரு படமும் முழுதும் எடுக்கபடாமலே பாதியில் நின்றது . அதிர்ஷ்டம் இல்லாத இசையமைப்பாளர் என்ற முத்திரையோடுதான் தமிழ் சினிமா அவரை வரவேற்றது ..!
1983 ஆம் ஆண்டில் ‘மாட்டுக்கு மன்னார்’ என்ற படத்திற்கு இசையமைக்க வந்த தேவாவின் முதல் படம் வெளியான ஆண்டு 1989. ‘மண்ணுக்கேத்த மகராசா’ தான். ஆம், ஆறு வருடத்தில் வெறும் தோல்வியை மட்டுமே பார்த்தவர்தான் தேனிசை தென்றல்…!
அதன் பிறகு சாதாரண இசையமைப்பாளராக இருந்த தேவாவின் சூப்பர் மாஸ் மொமண்ட் அண்ணாமலை பட வாய்ப்புதான். கேபி அவர்கள் ’92ல், மூன்று படத்திற்கு பூஜை போடுகிறார். மூன்றிலும் வேறு வேறு இசையமைப்பாளர்கள். அதில் ஒரு படம்தான் அண்ணாமலை …!
தனது பெயரை தமிழ் சினிமாவில் நிலைநாட்ட தேவாவிற்கு வந்த அந்த வாய்ப்பை ஒரு சதவீதம் கூட வீணாக்காமல் சிக்ஸர் அடித்தார். அதுவரை சூப்பர்ஸ்டார் பெயருக்கு என்று தனி தீம் இல்லாத நிலையில் தேவா அன்று போட்ட இசைதான் இன்றுவரை சூப்பர்ஸ்டாரின் டைட்டிலில் ஒலித்து கொண்டிருக்கிறது. அண்ணாமலையின் வெற்றி தேவாவை தென்னிந்திய சினிமாவையே ஒரு வலம் வர வைத்தது …!
தேவாவின் தனித்தன்மை “கானா பாடல்கள்” தான். தேவா திரை இசைக்கு வரும்போது இளையராஜா, ரகுமான் என இரு பெரும் ஜாம்பவான்கள் இருந்த காலம். அவர்களை விட தனித்து தெரிய தேவா தான் சென்னையில் கேட்ட சென்னை பூர்வகுடிகளின் கானா இசையை திரையில் பயன்படுத்த தொடங்கினார். அது அவருக்கு பெரிய வெற்றியையும் ஈட்டி தந்தது.
தேவா போல ஒரு ராவான கானா பாடலை கொடுக்க யாராலும் முடியாது என்ற அளவிற்கு அவருக்கு புகழை சேர்த்தது …!
’90கள் தேவாவின் பாடல்தான் எங்கு காணிணும். ஒருபுறம், ரகுமான் புதிய இசையை வழங்கி கொண்டிருந்தாலும், தேவாவின் கொடியும் பறந்து கொண்டுதான் இருந்தது ..!
ரஜினிக்கு அண்ணாமலை , பாட்ஷா , அருணாசலம் என்றும் கமலுக்கு அவ்வை சண்முகி , பம்மல் கே சம்பந்தம் , பஞ்ச தந்திரம் என்றும் தமிழ் சினிமாவின் நிரந்தர ஆளுமைகளுக்கு பெரிய வெற்றி பாடல்களை தந்தவர் தேவா..!
அவ்வை சண்முகி நூறாவது நாள் விழாவில் கமல் பேசியது, தேவாவை சிறு வயதில் இருந்தே தெரியும் நான் வேலை செய்யும் நாடக கம்பெனிகளில் தேவாவும் இசை உதவியாளராக இருப்பார் ஆனால் அந்த நட்பை தனக்கு வாய்ப்பு கேட்க ஒருபோதும் பயன்படுத்தவில்லை. அதுதான் அவரின் திறமை மீது அவருக்கு இருந்த நம்பிக்கை …!
அடுத்த தலைமுறை நடிகர்களான அஜித் , விஜய்க்கும் பல ஹிட் பாடல்களை தந்துள்ளார் . அஜித்திற்கு வாலி , முகவரி , அமராவதி , ஆசை , காதல் கோட்டை , ரெட் என அவரின் வாழ்வின் முக்கிய வெற்றிகளில் தேவா தன் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளார் .மற்றொரு பக்கம் விஜய்க்கு என்று ரசிகன் , மாண்புமிகு மாணவன் , குஷி , பிரியமுடன் , நினைத்தேன் வந்தாய் , ஒன்ஸ்மோர் , நேருக்கு நேர் என அவரின் திரை வாழ்விலும் தேவாவின் இசை முக்கியமானது …!
பாட்ஷா படத்தின் ராரா ராமைய்யா பாடல் எவ்ளோ பெரிய ஹிட் பாடல் அதற்கு அவர் எடுத்து கொண்டது வெறும் பதினைந்து நிமிடங்களே …!
தேவாவின் தோல்விகளை விட அவர் பட்ட அவமானங்கள்தான் அவரை இந்த அளவிற்கு உயர்த்தியது. ஒரு பத்திரிகை, அண்ணாமலை விமர்சனத்தில் அண்ணாமலை பாடல் விசயத்தில் தம்பிமலை என தேவாவை கிண்டல் அடித்தது இத்தனைக்கும் அண்ணாமலை பாடல் பட்டி தொட்டி எங்கும் சூப்பர் டூப்பர் ஹிட் , அடுத்து பாட்ஷாவிற்கு விமர்சனம், சீ இதுக்கு இசை யார் அமைச்சா நமக்கென்ன என்ற விமர்சனமும் , ஆசை பட விமர்சனத்தில் ரகுமான் இசை நன்றாக உள்ளது எனவும் , தேவாவின் இசை ஒரொண்ணு ஒன்னு வாய்ப்பாடு என்றும் பெரிய விமர்சனம் வைத்தபோதும் அதை பற்றி கவலைப்படாமல் தன் மீது இருந்த திறமையை மட்டும் நம்பி தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு கலைஞனாக உருவெடுத்துள்ளார் தேனிசை தென்றல் தேவா ..!
காத்தடிக்குது , விதமா விதமா சோப்பு சீப்பு கண்ணாடி , கவலைப் படாதே சகோதாரா , லாலுக்கு டோல் டப்பிமா , மீனாட்சி மீனாட்சி , சலோமியா என அறுபதுக்கும் மேற்பட்ட கானா பாடல்களை தந்துள்ளார் தேவா …!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தேவா..!