திருக்குறள் தெரியும்
அது என்ன திரு.குரல்.
ஆமாங்க.. நம்ம எல்லோருக்குமே பிடிச்ச குரல்ன்னு ஒன்னு இருக்கும் அது கேட்கும்போது அப்படியே உள்ளுக்குள்ள
குட்டி டைனோசார் பறக்கும்..!!
(எத்தன நாளைக்கு பட்டாம்பூச்சியே பறக்க விடறது)
குழந்தையா இருக்கப்ப அம்மாவின் குரலும் அப்பாவின் குரலும் நமக்கு எப்பவும் ஸ்பெஷல்தான் இல்லயா..!!
கொஞ்சம் வளர்ந்ததும் நம்ம நண்பர்கள், சில சொந்தங்களின் அன்புக்குரல் நமக்கு ரொம்பவே பிடிக்கும்.
பள்ளி, கல்லூரியில்
கண்டிப்பும் கணிவும் தரும்
எல்லா ஆசிரியர்கள் குரலும் நமக்கு பிடிக்கும்தானே..!!
பருவத்தில் காதலன்/காதலியின்
குரல் கடவுளின் குரலா(?) ஒலிக்கும்..!!
சரி விஷயத்துக்கு வருவோம்..!!
சினிமா
“மன்மதலீலையை வென்றார் உண்டோ”..மயக்கும் வெண்கலக் குரல் பாகவதர் பாட்டுக்கு இன்றும் சீசன் உண்டு.
அன்று கதாநாயகன் மட்டுமல்ல கதாநாயகிகள் குரலும் ஓங்கி ஒலித்ததை வெள்ளித்திரை கண்டது.
அவ்வையார், பூம்புகார் கண்ணகி,பானுமதி,சாவித்திரி குரல்களெல்லாம் நகலெடுக்க முடியாதவை.
(இன்று பிண்ணனி குரல் கொடுப்பதெல்லாம் யார் கணக்கில் சொல்வது)
ஒரு மனிதன் ஓராயிரம் குரல்
செவாலியே சிவாஜி.
கழுத்தில் குண்டடிபடாத
புரட்சித்தலைவரின் குரல்.
S.S.R எனும் லட்சியக்குரல்
ஜெமினியின் காதல் ❤️ குரல்..!!
“நெஞ்சுக்குள்ள குடியிருக்கும்”
தளபதியும்
“அது” என்னும் தலையின் குரலும்
இன்றைய இணைய உலக ரசிகர்களின் சீண்டல் குரல்கள்.
M.R.ராதாவின் கலகக்குரல் நாடறியும் அது அப்படியே வம்சாவழி தொடர்வதுதான் கூடுதல் சிறப்பு.
வில்லன் குரல்கள் மட்டும் சளைத்தவை அல்லவே.
நம்பியார்,அசோகன் R.S. மனோகர் குரல்கள்
ஒரு ரகம் என்றால்.
பி.எஸ்.வீரப்பாவின்
“சபாஷ் சரியான போட்டி”
“இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்” இன்று வரை இதற்கு ஈடில்லைதானே..!!
நகைச்சுவையில்
என்.எஸ்.கே, மதுரம், மனோரமா,
கோவை சரளா பாலையா, தேங்காய் சீனிவாசன்,
நாகேஷ்,செந்தில்,கவுண்டமணி,
விவேக்,வடிவேல்,சூரி,யோகிபாபுவரை அவர்களின் குரல்தான் அவர்களுக்கு கூடுதல் பெருமை.
லூஸ் மோகனின் சென்னைக்குரலும்
குமரிமுத்துவின் சிரிப்பும் (குரல்தானே) இன்னாபா சொல்லிக்கிறே சர்தானே..!!
பா வரிசை இயக்குனர்களும் சரி நடிகர்களும் சரி அவர்களின் தனிக்குரல் அவர்களின் சிறப்பு.
“என் இனிய தமிழ் மக்களே”
பாரதிராஜா, பாக்கியராஜ்,பார்த்திபன்,சுந்தர்.C
வரை அது தனி ரகம்.
K.B யின் குரலை விட அவர் பேச்சுக்கு கட்டுப்பட்ட இரண்டு நடிகர்களின் வசீகர குரலுக்கு வரும் காலத்தில் தமிழ்நாடே பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறது.
அரசியல்
மொத்தமே ஐந்து குரல்கள்தான்..!!
“எலே என்ன நான் சொல்றது”
“எனதருமை தம்பிகளே”
“அன்பு உடன்பிறப்புகளே”
“ரத்தத்தின் ரத்தங்களே”
“உங்களால் நான்
உங்களுக்காக நான்”
இசை
எம்.எஸ் அவர்களின் குரல் ஒலிக்காத வீடுகளே இல்லை எனலாம்.
டி.கே பட்டம்மாள், அருணா சாய்ராம்,நித்யஸ்ரீ, உன்னிமேனன். டி.எம் கிருஷ்ணா
மேடையில் தங்கள் குரலால் அழகு ஓவியம் வரைந்த/வரையும்/
வரைந்து கொண்டு இருப்பவர்கள்.
திரைஇசைக்குரல்கள்
ஜிக்கி,M.S.ஜானகி,P.சுசீலா,
T.M.S, S.P.B,மனோ,ஹரிஹரண் குரல்களில் இன்றளவும் நாம் மயங்கிக்கிடப்பது வரமல்லவா.
M.S.V. இளையராஜா இசையில் மட்டுமல்ல குரல்களிலும் தெய்வீகம் இருக்கும்தானே..!!
A.R.ரஹ்மான் ,யுவன்,அனிருத் இன்றைய இளைஞர்களின் குரல்.
செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசுவாமி இந்த குரல் எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்கும்.
ரேடியோவில் கிரிக்கெட் வர்ணனை கேட்டவர்களுக்கு தெரியும் அந்த குரல் கடத்தும் வெற்றியின் சந்தோஷம்.
பகுத்தறிவுக்கு ஒரு குரல் என்றால்
பக்திக்கு பல குரல்கள் கிருபானந்த வாரியார்
சுகி சிவம், வேளுக்குடி என
வரிசை கட்டி திளைத்த நாட்கள் நிறையவே உண்டு.
பட்டி மன்றங்கள் என்றாலே
சாலமன் பாப்பையாவையும் ராஜாவின் குரலையும் எதிர் பார்த்தேதான் செல்ல வைத்தன..!!
சுதந்திர குரல்களின் குரல்வளை நெறிக்கப்பட்ட தியாகம் ஏட்டில் சொல்ல இயலாது.
தேசிய அளவில், உலக அளவில் இன்னும் சில குரல்கள் விடுபட்டு இருக்கலாம்.
இப்படி நாம் விரும்பிய
நம்மை மயக்கிய
நம்மை நாமே மறக்க வைத்த குரல்கள் ஆயிரம் இருந்தாலும்…
“என்னங்க” என்ற குரலுக்கு
“இதோ வந்துட்டேன்ம்மா” என்று
பதில் சொன்னால்..
அந்த குரலுக்கு
அன்பு,மரியாதை, பயம்
இப்படி என்ன பெயர் வேண்டுமென்றாலும் வைத்துக்கொள்ளலாம்..
சரிதானே நண்பர்களே..??