நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்துள்ள நிலையில், இந்தியாவில் முதன் முதலில் கொரோனா தொற்று பதிவான கேரளாவில், கொரோனா பாதிப்பு கணிசமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு ஒற்றை இலக்க எண்கள் அல்லது அதற்கு சற்றும் கூடுதலான எண்ணிக்கையிலேயே இருந்தது. நேற்று புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகவில்லை.
இந்த நிலையில், 2-வது நாளாக கேரளாவில் நேற்றும் புதிதாக கொரோனா நோய்த்தொற்று யாருக்கும் பதிவாகவில்லை. ஏற்கனவே கொரோனா பாதிக்கப்பட்ட 34 -பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று ஒருநாளில் மட்டும் 61 பேர் குணமடைந்துள்ளனர். கேரளாவில் இதுவரை 499 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில், 462 பேர் குணமடைந்துள்ளனர்.
கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘நன்று, பரவும் விகிதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இன்று யாருக்கும் கொரோனா தொற்று இல்லை. 61 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். தற்போது 34 பேர் மருத்துவனையில் உள்ளனர். புதிதாக ஹாட்ஸ்பாட்ஸ் ஏதும் இல்லை. 21,724 பேர் கண்காணிப்பில் உள்ளனர்’’ என்று பதிவிட்டுள்ளார்.