கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பில்கேட்ஸ் உடன், பிரதமர் மோடி, வீடியோ கான்பரன்சில் உரையாடினார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: பில் கேட்ஸ் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை தலைவர் பில்கேட்ஸ் உடன் பிரதமர் மோடி, வீடியோ கான்பரன்சில் பேசினார். கொரோனா வைரஸ் உலக நாடுகளில் ஏற்படுத்தி உள்ள தாக்கம், வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு மற்றும் ஒருங்கிணைந்து வைரசுக்கு எதிராக போராடுவது குறித்து இருவரும் விவாதித்தனர்.
கொரோனாவுக்கு எதிராக இந்திய சுகாதாரத்துறை போராடுவது குறித்து விளக்கிய பிரதமர், கொரோனாவுக்கு எதிராக போராட இந்தியாவுக்கு மட்டுமன்றி உலக நாடுகள் பலவுக்கும் கேட்ஸ் அறக்கட்டளை உதவுவதற்கு பாராட்டு தெரிவித்தார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மைக்ரோ சாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், பில் கேட்ஸ் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையை நிறுவியுள்ளார். சீனா மற்றும் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு உதவுவதற்காக, தனது அறக்கட்டளை மூலம் 100 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.700 கோடி) வழங்குவதாக அவர் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.