சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவான ஈஸ்வரன் படம் பொங்கலுக்கு வெளியானது.
பிப்ரவரி 3 அன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் சிம்பு. அதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
உங்களை நான் ரசிகர்கள் என்று சொல்வதை விட எனது குடும்பம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். உங்கள் அன்புக்கு நிறைய கடன்பட்டுள்ளேன்.
எனது பிறந்த நாளன்று நான் உங்களோடு தான் இருக்க வேண்டும். ஆனால் சில முன் தீர்மானங்களால் ஊரில் இல்லை. வெளியூர் செல்கிறேன்.
என் குடும்பத்தினர் வீட்டின் முன்பு காத்திருப்பதை நான் விரும்பவில்லை.
அதனால் நண்பர்கள் யாரும் என் பிறந்த நாளன்று சந்திக்க வந்து ஏமாற்றமடைய வேண்டாம். உங்களை நேரடியாகச் சந்திக்கும் நிகழ்வை விரைவில் ஒருங்கிணைப்பேன். நாம் சந்திப்போம்.
ஒரு சிறு மகிழ்ச்சியாக என் பிறந்த நாளன்று மாநாடு டீசர் வெளியாகும். மகிழுங்கள். நிச்சயம் இனி நமது ஆண்டாக வெற்றிகரமான ஆண்டாக இருக்கும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.