பெரியார் பிறந்த செப்டம்பர் 17-ஆம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்று பேரவையில் இன்று பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
இது குறித்து மேலும் அவர் கூறியதாவது :
- செப்டம்பர் 17ந் தேதி தலைமைச்செயலகம், அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழி எடுக்கப்படும்.
- இந்தியா முழுவதும் சமூக நீதி பரவ அடித்தளம் அமைத்தவர் பெரியார்.
- பெரியார் எழுதிய எழுத்துகள், பேசிய பேச்சுகள் யாரும் எழுத, பேச தயங்கியவை ஆகும்.
- பெரியாரின் போராட்டம் குறித்து பேசுவது என்றால் அவையை 10 நாட்கள் ஒத்திவைத்துவிட்டு பேச வேண்டும்.
- பெரியாரின் குருகுல பயிற்சிதான் திமுகவை உருவாக்கியது என
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.
மேலும் உறுதிமொழியையும் அனைத்து இடங்களிலும் கூற உத்தரவிட்டார்.
சமூக நீதி நாள் உறுதிமொழி :
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியும் –
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியும்
எனது வாழ்வியல் வழிமுறையாகக் கடைப்பிடிப்பேன்!
சுயமரியாதை ஆளுமைத் திறனும்-பகுத்தறிவுக் கூர்மைப் பார்வையும் கொண்டதாக என்னுடைய செயல்பாடுகள் அமையும்!
சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்துக் கொள்வேன்!
மானுடப் பற்றும் மனிதாபிமானமும் ஒன்றே எனது இரத்த ஓட்டமாக அமையும்!
சமூகநீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதியேற்கிறேன்!”
என்ற உறுதிமொழியையும் முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.