தமிழக கிராமத்து பாரம்பரியப்படி அம்மியில் மஞ்சள் அரைத்து அசத்தலாக ஆரோக்கியமாக வகை வகையான உணவுகளை சமைத்து அதனை யூடியூப்பில் வெளியிட்டு உள்ளூர் முதல் உலக நாடுகள் வரை பிரபலமான சேனல் வில்லேஜ் குக்கிங் சேனல் .
தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, அவர்களுடன் இணைந்து சமையல் செய்து உணவருந்தும் காணொளி வைரலாகி வருகிறது.
காளான் பிரியாணி தயார் செய்த இந்த குழுவினருடன் இணைந்தார் ராகுல்.
ராகுலின் ஆங்கிலத்தை அருகில் இருந்து தமிழில் மொழி பெயர்த்தார் எம்.பி. ஜோதிமணி.
தங்கள் சமையல் கலையை உலகமெங்கும் எடுத்துச்சென்று சமைக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்த குழுவினரிடம், சிகாகோவில் உள்ள தனது நண்பர் மூலம் உதவுவதாக உறுதி அளித்தார் ராகுல் காந்தி.
அதே போல இந்த சமையல் கலையை கர்னாடகம், மத்திய பிரதேசம் , ஆந்திரா உள்ளிட்ட இந்தியாவின் பல பகுதிகளுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என ராகுல் காந்தி கேட்டுக் கொண்டார்.
அவர்களுடன் அமர்ந்து காளான் பிரியாணியை ருசித்த ராகுல், மனம் விட்டு உரையாடிய படியே காளான் பிரியாணி ரொம்ப நல்லாயிருக்கு என்று தமிழில் பாராட்டினார்.
அவர்களிடம் இருந்து விடை பெறுவதற்கு முன்னதாக அடுத்த முறை வரும் போது தனக்கு ஈசல் சமைத்து தருவீர்களா? என உரிமையோடு கேட்ட விதம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராகுல் காந்தியின் இந்த தமிழக பிரச்சாரம் தமிழக காங்கிரஸ்காரர்களுக்கு ஒரு நம்பிக்கையையும் , உத்வேகத்தையும் அளித்துள்ளது.