தமிழகம் முழுவதும் 160 நாட்களுக்குப் பின்னர் மாவட்டத்திற்குள்ளான பொதுப்போக்குவரத்து தொடங்கியுள்ளது.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பேருந்துகள் சுகாதார நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தன.
கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகள் 5 மாதங்களுக்குப் பின்னர் இயங்கத் தொடங்கியுள்ளன.
மாவட்டத்திற்குள்ளான போக்குவரத்துக்கு தற்போது அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பேருந்துகள் கிருமி நாசினி மூலம் முழுமையாகச் சுத்தம் செய்யப்பட்டன.
சென்னையில் 33 பணிமனைகளில் இருந்து மொத்தம் 3 ஆயிரத்து 300 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கோவையில் தற்போது 50 சதவிகித பேருந்துகள் இயங்கத் தொடங்கியுள்ளன.
இதேபோல் வேலூர் மாவட்டம் குடியாத்தம், கடலூர், கரூர், தென்காசி உள்ளிட்ட பகுதிகளிலும் சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்பட்டு பேருந்துகள் இயக்கப்பட்டன.
ஒவ்வொரு பேருந்திலும் பயணிகள் பின்பக்கமாக ஏறி கிருமிநாசினியில் கைகளைச் சுத்தப்படுத்திக் கொள்ளவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் பேருந்தின் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் உடல் வெப்பம் பரிசோதிக்கப்பட்டு, முகக்கவசம், கையுறை அணிந்திருந்தனர். முகக்கவசம் அணிந்த பயணிகள் மட்டுமே பேருந்தில் ஏற அனுமதிக்கப்பட்டனர்.
பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் கையுறை மற்றும் முகக்கவசம் அணிந்து பணிபுரிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பேருந்தில் 24 பேர் மட்டுமே அனுமதிக்க வேண்டும் எனவும் முறையாக சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்து பேருந்துகளிலும் ஏறும் வழியில் சானிடைசர்கள் வைக்கப்பட்டுள்ளன.
பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என நடத்துனர்கள் அறிவுறுத்துகின்றனர்.
பயணிகளுக்கு நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை.